நான் இசைக் கடவுள் அல்ல! 13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி! சென்னையில் இளையராஜா பெருமிதம்
சென்னை: எனது சிம்பொனி இசைக்கு லண்டனில் கிடைத்த ஆரவாரத்தால் இசை கோர்ப்பாளரே அதிர்ச்சியடைந்துவிட்டார் என்றும் எனது சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் என்றும் நான் இசை கடவுள், இசை தெய்வம் இல்லை என்றும் இளையராஜா தெரிவித்திருந்தார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இசை கோர்ப்பாளர் நிக்கி தாமஸ் அழகாக அவருடைய குழுவினருடன் சிம்பொனியை வாசித்தார். எப்போதும் ஒரு இசையை வாசித்தவுடன் எல்லாரும் அமைதியாக இருப்பார்கள். கை தட்டக் கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மறந்து மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இசை கோர்ப்பாளரே ஆச்சரியமடையும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 80 பேர் வாசித்தனர். சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடலையும் நான் பாடினேன். இதுவரை நான் அவர்கள் இசையில் பாடியதில்லை. ஆனால் அவர்கள் இசையை அழகாக வாசித்தனர்.
என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி, தமிழக அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய இறைவன் அருள்புரிந்தார். என்னை இசைக் கடவுள் என அழைக்கிறார்கள். என்னை கடவுள் என சொல்லி கடவுளை தாழ்த்தி விட வேண்டாம். நான் சாதாரண மனிதன்தான்.
எனக்கு 81 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்ய போகிறார் என நினைக்காதீர்கள். இனிதான் ஆரம்பமே. தற்போது 13 நாடுகளில் எனது சிம்பொனி இசையை நிகழ்த்துகிறேன். அக்டோபர் 6ஆம் தேதி துபாய், செப்டம்பர் 6ஆம் தேதி பாரீஸ், ஜெர்மன் என வரிசையாக நிகழ்ச்சிகள் உள்ளன.
சிம்பொனி இசையை டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். பண்ணைபுரத்தில் இருந்து எனது வெறுங்கால்களில் எப்படி வந்தேனோ, அதே போல் இன்றும் இந்த இடத்தில் நிற்கிறேன். இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.
முன்னதாக இளையராஜாவை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி வரவேற்று, அவர் இந்தியாவுக்கே பெருமை என பாராட்டினார். அது போல் பாஜக சார்பில் கரு நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்று வாழ்த்தி பேசினர்.
இசை உலகிற்கு ஏராளமான சாதனைகளை செய்துள்ள இளையராஜா மற்றொரு சாதனையான சிம்பொனியை தனது கனவாகவே கருதி வந்தார். அந்த வகையில் அவர் 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்து அதற்கு வேலியண்ட் என பெயரிட்டிருந்தார்.
இந்த சிம்பொனியை உலகின் சிறந்த இசைக் குழுவினரான ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினருடன் இந்திய நேரப்படி நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். ஈவென்டிம் அப்பல்லோ எனும் அரங்கில் அவர் சிம்பொனியை அரங்கேற்றியதை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
சிம்பொனி என்பது ஒரே நேரத்தில் பலவிதமான இசைக் கருவிகளை இசைப்பதுதான். இதனால் ஒவ்வொரு இசைக் கலைஞர்களுக்கும் இளையராஜா தனித்தனி குறிப்புகளை கொடுக்க வேண்டும். இதுதான் இந்த சிம்பொனியில் உள்ள சிரமமே!
நேற்று முன் தினம் சுமார் ஒன்றரை மணி நேரம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதில் 45 நிமிடங்கள் சிம்பொனி இசைக்கப்பட்டது. சிம்பொனி இசையை மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் அரங்கேற்றியிருந்தனர்.












Click it and Unblock the Notifications