லோக்சபா தேர்தலுக்கு நாலு கால் பாய்ச்சலில் தயாராகும் திமுக.. ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின் பின்னணி
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பலருக்கும் மாவட்ட ஆட்சியராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இப்போதே நாலு கால் பாய்ச்சலில் தயாராகி வருகிறது திமுக அரசு.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் குறிப்பாக பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித் துறை இணை ஆணையர் (நுண்ணறிவு) ஐ.எஸ்.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ்.உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறை கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண்மை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், வணிக வரித் துறை இணை ஆணையர் எம்.எஸ்.சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராகவும், வழிகாட்டிப் பிரிவு செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் பி.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அனீஷ் சேகர் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ஐடி அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் நல்ல நட்புடன் இருப்பதால் அவர் ஐடி துறைக்கு சென்னைக்கு எல்காட் எம்டியாக மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்த கையோடு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.

டாஸ்மாக் எம்டி சுப்ரமணியன் மாற்றப்பட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமண மண்டபங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளித்த புகார் மாநிலம் முழுவதும் பரபரப்பை பற்ற வைத்ததை அடுத்து சுப்ரமணியன் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு உதவியாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரீட்டா, லட்சுமி என்ற இரண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் நிதித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு மே மாதம் நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக திட்டமிட்டுள்ளது. எனவே மக்கள் நலத்திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடைய செய்ய வேண்டும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications