கலப்பட உணவுப் பொருட்கள் விநியோகம்... முதலிடத்தில் தமிழகம்
சென்னை: கலப்பட உணவுவில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்றைய சூழலில் கலப்படம் இல்லாத பொருட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வணிகரீதியாகவும், கூடுதல் வருவாய் கருதியும் உணவுப்பொருட்களில் நடக்கும் கலப்படம் உடல் நலக்கேட்டுடன், உயிர் குடிக்கும் ஆபத்தையும் தருகிறது.

அரிசி முதல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் பலர் நோய்வாய்ப்படும் சூழல் நிலவுகிறது. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி கலப்பட பொருட்களை கண்டறிய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கலப்பட உணவில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுகளில் உணவு மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 2 இடங்களில் உத்தர பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
உணவுக்கலப்படம் தடுப்பு சட்டங்களில் கடுமை இல்லை. இ.பி.கோ 272 மற்றும் 273 பிரிவுகளில் திருத்தங்கள் செய்து, ஆயுள் தண்டனை வரை வழங்கிட பரிந்துரைக்கப்பட்டும் மாற்றங்கள் இல்லை.
கலப்படம் செய்வோர் மீதான சட்டங்களை மேலும் கடுமைப்படுத்துவதுடன், மக்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், அக்மார்க் உள்பட தர முத்திரைகள் மீதான மக்கள் ஈடுபாட்டை அதிகரிப்பதிலும் அரசு மேலும் கவனம் காட்டுவது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications