Exclusive: ஆளை விடுங்க... இனி யாருக்கும் நான் ஆலோசனை கூறமாட்டேன்... மனம் திறந்த தமிழருவி மணியன்..!
சென்னை: அரசியல் தொடர்பாக இனி யாருக்கும் தாம் ஆலோசனை கூறப்போவதில்லை என்கிறார் காந்திய மக்கள் இயக்கப் பேரவை தலைவர் தமிழருவி மணியன்.
தமிழக அரசியலில் மாற்றுசக்தியை உருவாக்க முயற்சித்து தோல்வியுற்றவன் தாம் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கருத்தறிய தமிழருவி மணியனை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்ட போது விரக்தியான நிலையில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

ஆலோசனை
''அரசியல் தொடர்பாக இனி யாருக்கும் ஆலோசனை கூறமாட்டேன். ஏனென்றால் திமுக-அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் ஒரு புதிய சக்தியை உருவாக்க வேண்டும் என முயற்சித்து அந்த முயற்சியில் தோல்வியுற்றவன் நான். இதனால் தான் தேர்தலுக்கு முன்பாகவே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அதன்படி விலகியும் விட்டேன்.''

தோல்வி
''இப்போது நான் உண்டு எனது பணி உண்டு என்று இருந்து வருகிறேன். புத்தகங்களை வாசித்து நேரத்தை செலவிட்டு வருகிறேன். 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் முழுமையாக தோல்வியை தழுவியன் என்பதால் இப்போது வீட்டில் தான் இருந்து வருகிறேன். ரஜினி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை எந்த கண்ணோட்டத்திலும் நான் பார்க்கவில்லை.''

ரஜினி அழைப்பு
''அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தவுடன் நடிகர் ரஜினிகாந்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, ஐயா, உங்களை சந்திக்க வேண்டும் என்றார். நானும் நேற்று சென்று அவரை சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்துவிட்டேன். மற்றபடி ரசிகர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசுகிறார், என்ன முடிவெடுப்பார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.'' இவ்வாறு ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறினார்.

விரக்தி
நடிகர் ரஜினிகாந்தை அரசியல் கட்சி தொடங்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் தமிழருவி மணியன். இறுதியில் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் கூறி பின்வாங்கிய விவகாரம் தமிழருவி மணியனுக்கு பெரும் ஏமாற்றத்தையும், விரக்தியையும் தந்தது. இதன் வெளிப்பாடாகவே தமிழருவி மணியனின் வார்த்தைகளும் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications