அதிமுகவில் இணைந்த கைகள்... திமுகவில் புகையும் பங்காளிச்சண்டை - ஆளப்போவது யார்
அதிமுகவில் பிரிவு ஏற்பட்டு விட்டதாக பலரும் கூறி வந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து ஒரே பிரச்சார வேனில் வலம் வந்துள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் திமுகவில் ஸ்டாலின் முதல்வராக மாட்டார் என்
சென்னை: ஒரு தாய் மக்கள் நாம் என்போம்...ஒன்றே எங்கள் குலமென்போம் என்று பாடினார் எம்ஜிஆர். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே! நாளை நமதே!! என்று எம்ஜிஆர் பாடிய பாடல்களை பதிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக தொண்டர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்துகின்றனர். இருவருக்கும் சண்டை, பிரிந்து விடுவார்கள் கட்சி உடைந்து விடும் என்று வதந்தி பரப்பியவர்களுக்கு மத்தியில் ஒரே பிரச்சார வாகனத்தில் ஒன்றாக வலம் வந்து தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுகவில் உடன்பிறப்பே என்று எல்லோரையும் அழைத்து கட்டிப்போட்டார் மறைந்த தலைவர் கருணாநிதி. இன்றைக்கு அவரது வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பங்காளிச்சண்டைதான் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. பத்தாண்டுகாலமாக எதிர்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்கிறது திமுக. இதற்கு காரணம் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டிதான்.

அழகிரி vs ஸ்டாலின்
திமுகவில் அப்போதும் இப்போது எப்போதும் மு.க. அழகிரிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் இடையேதான் ஓயாத சண்டை. கருணாநிதி இருந்த போதே பெரிதாக வெடித்த பங்காளிச்சண்டையால் மு.க அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பல ஆண்டுகள் ஆன பின்னரும் மு.க ஸ்டாலின் மீதான வெறுப்பு மு.க அழகிரிக்கு நீரு பூத்த நெருப்பாக இருந்தது.

திமுகவின் தோல்வி
அழகிரி திமுகவில் இருந்த வரைக்கு தென் மாவட்டங்களில் அவரது கை ஓங்கியிருக்கும். தேர்தலில் தனி பாணியை கையாண்டு திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வார். அழகிரியின் நீக்கத்திற்கு பிறகு அவரது செயல்பாடுகள் எல்லாமே திமுகவிற்கு எதிரானதாக மாறிவிட்டது. அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது திமுக.

மோடிக்கு எதிரான பிரச்சார அலை
அதே நேரத்தில் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அபரிமிதமான வெற்றியை பெற்றது. அதற்குக் காரணம் தமிழகத்தில் பாஜக, மோடிக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அந்த பிரச்சார பாணி சட்டசபைத் தேர்தலில் எடுபட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

அழகிரி ஆவேசம்
சில தினங்களுக்கு முன்பு வெடித்து கிளம்பி விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் அமர முடியாது எனது ஆதரவாளர்கள் விட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் மு.க. அழகிரி. மிசன் 200 இலக்குடன் இந்த சட்டசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளது திமுக. கடந்த 10 ஆண்டு காலமாக அரியணையில் ஏற காத்திருக்கிறது. ஆட்சியை பிடிக்க 117 இடங்கள் தேவை என்றாலும் அந்த தொகுதிகளாவது கிடைக்க வேண்டும்.

முதல்வர் நாற்காலி கிடைக்குமா
முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது மு.க. ஸ்டாலினின் நீண்ட நாள் கனவு. சென்னை மேயராக, துணை முதல்வராக ஸ்டாலின் இருந்திருந்தாலும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற கடந்த 5 ஆண்டு கால கனவு இம்முறையாவது நிறைவேற வேண்டும் என்று அவரது கட்சி தொண்டர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஆசைப்படுகின்றனர். ஸ்டாலின் கனவு நனவாகுமா? நாற்காலி கிடைக்குமா என்பது முடிவுக்கு வரப்போகும் பங்காளிச்சண்டையைப் பொறுத்துதான் இருக்கிறது.

அதிமுக தொண்டர்கள்
நான் இல்லாவிட்டாலும் எனக்குப் பிறகு இருநூறு ஆண்டு காலம் அதிமுக தமிழகத்தில் ஆட்சி செய்யும் என்று சட்டசபையில் சொன்னார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சி உடைந்த போது அதிமுக தொண்டர்கள் நொறுங்கித்தான் போனார்கள். ஆனாலும் மாற்றுக்கட்சிக்கு போக எந்த தொண்டனும் விரும்பவில்லை.

ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து இரட்டை இலையை கைப்பற்றி கடந்த 4 ஆண்டுகாலமாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதிமுக இம்முறை வெற்றி பெற்றால் எம்ஜிஆருக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி கட்சி என்ற பெருமையை பெரும்.

இபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து பிரச்சாரம்
அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளது என்றும் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடையும் என்றும் மக்கள் கிராம சபை எனப்படும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசி வருகிறார் மு.க ஸ்டாலின். ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்றும் பலரும் கிளம்பி விட அது அதிமுக தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது. தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நெல்லை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து ஒரே பிரச்சார வேனில் சென்று மக்களை சந்தித்துள்ளனர். மக்களின் ஆதரவு அதிமுகவிற்கு கிடைக்குமா? ஆட்சியை தக்கவைப்பார்களா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications