தமிழகத்தில் கொரோனா பரவலை சிறப்பாக கையாளுகிறீர்கள்.. நேரில் சந்தித்த முதல்வரை பாராட்டிய ஆளுநர்
சென்னை: கொரோனா விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சரின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில், பன்வாரிலால் புரோகித்தை, எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு, தலைமைச் செயலாளர் சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு சம்பந்தமாக அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
ஜனவரி 30ஆம் தேதி இதை ஒரு பெரும் தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு கொண்டு வரக்கூடிய அறிவுரைகளை தமிழ்நாடு அரசு மிகத் துரிதமாக செய்து வந்தது.
அப்போதே, நமக்கு எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்பதை யூகித்து அப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினோம். முக கவசம், வென்டிலேட்டர் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். இப்போதைக்கு நமக்கு தேவையான அளவுக்கு உபகரணங்கள் இருக்கின்றன. 1.5 கோடி அளவுக்கு n95 முகக் கவசங்கள் ஆர்டர் செய்துள்ளோம்.

மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது அல்லது சரியாகி விட்டால் எப்படி செய்வது என்ற இருவகை திட்டங்களை யோசித்து செயல்படுத்தி வருகிறோம். அரசு சார்பில் 14 பரிசோதனை மையங்கள், தனியார் சார்பில் மூன்று பரிசோதனை மையங்கள் ஏற்கனவே உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வசதி உள்ளது. நாளை முதல் கூடுதலாக 6 பரிசோதனை மையங்களில் பரிசோதனை ஆரம்பிக்கும்.
டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்று விட்டு திரும்பியவர்களிடமிருந்துதான் அதிகப்படியான பாசிட்டிவ் வந்துகொண்டிருக்கிறது. எனவே அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கண்டைன்மெண்ட் பகுதியாக மாற்ற கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறினால், மருத்துவமனைகளில் தனிமை முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications