மத்திய அரசுக்கு கண்டனம்... சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் மறியல்!
சென்னை : சிபிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சிபிஐயில் செய்த மாற்றங்களைக் கண்டித்து டெல்லியில் சிபிஐ அலுவலகம் நோக்கி காங்கிரஸ் தலைர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.
டெல்லியைப் போலவே சென்னையிலும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சாஸ்திரி பவன் நோக்கி சென்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.