ராஜீவ் கொலை வழக்கு.. நளினிக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினிக்கு 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோல் அளிக்க வேண்டும் என அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிலும் அவர் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த டிச. 23இல் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த டிச. 27இல் நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள அவரது உறவினர் சத்தியவாணி என்பவர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்தச் சூழலில் நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை 30 நாள் நீட்டிக்க வேண்டும் என அவரது தாய் பத்மா தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று நளனிக்கு 30 நாள் பரோல் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications