விரைவில் வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போகிறார் நம்ம முதல்வர்.. எப்படி தெரியுமா? சொல்கிறார் அமைச்சர் மா.சு
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை NIRF அமைப்பு வெளியிட்டு இருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று இருந்தது.
சென்னையில் இருந்து 69 கல்லூரி நிறுவனங்களும், கோவையில் இருந்து 32 கல்லூரி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருந்தது.

சென்னை ஆளுநர் மாளிகை
இதனிடையே சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சிறப்பு குறித்த செவ்வகரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறந்த கல்லூரி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருந்த உயர்கல்வி நிறுவனங்களைக் கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் இடம் பெற்ற கல்லூரிகளுக்கு எனது வாழ்த்துகள். தமிழக முதல்வர் படித்த மாநிலக் கல்லூரியும் இந்த சிறந்த கல்லி நிறுவனங்களுக்கான பட்டியலில் இடம் பெற்று உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி துறை எந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். மாநிலக் கல்லூரியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு உள்ளது.

கல்லூரிகள்
நாட்டிலேயே முதன்மையான இடத்தில் இருக்கும் சென்னை ஐஐடிக்கு எனது வாழ்த்துகள். இந்த பட்டியலில் வேலூர் கிறிஸ்துவ கல்லூரி, சென்னை சவீதா, எஸ்ஆர்எம் ஆகியவை சிறப்பான இடங்களைப் பிடித்து உள்ளது மகிழ்ச்சி! இதில் 12ஆவது இடத்தில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மிக விரைவில் டாப் 10 இடங்களுக்குள் வரும். அதற்கான நடவடிக்கை எடுக்கிறோம். வேலூர் கிறிஸ்துவ கல்லூரி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துகிறது. மேலும், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

சர்வதேச புகழ்
ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் என்னையும் கலந்து கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் நமது முதல்வரின் திட்டங்களும் நல்லாட்சியின் புகழும் உலகளாவிய புகழைப் பெற உள்ளது. நமது நாட்டிலேயே அதிகபட்ச மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. மொத்தம் 70 மருத்துவக் கல்லூரிகள் இங்கே உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications