மூவ்மென்ட்டை தடுக்க.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை தமிழக காவல் துறை முடக்கியுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடிக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதும் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 3 உதவியாளர்கள் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாவதிலிருந்து தப்ப ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

17ஆம் தேதி
இதையடுத்து அவர் 17ஆம் தேதி முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, திருச்சி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடப்பட்டு வருகிறது. எனினும் அவர் பிடிபடவில்லை. அவரது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெளிநாடு
ராஜேந்திர பாலாஜியை தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் விதமாக அவருக்கு எதிராக லுக் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் அவரது நகர்வுகளை முடக்க ராஜேந்திர பாலாஜியின் பெயரில் உள்ள 6 வங்கிக் கணக்குகளை தமிழக காவல் துறை முடக்கியுள்ளது. பொதுவாக ஒருவர் தலைமறைவு என அறிவித்துவிட்டால் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது வழக்கமான செயலாகும். இதன் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ராஜேந்திர பாலாஜி செல்வதை தடுக்கலாம்.
Recommended Video

உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு
இதனிடையே முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு வேளை உச்சநீதிமன்றத்திலும் இவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் இவரது பிடி மேலும் இறுகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications