அடம் பிடிக்கும் காற்றழுத்தம்.. வேலையை காட்டும் வெட்டி சிஸ்டம்.. சென்னையில் குளிர் ஏன்? வெதர்மேன்
சென்னை: சென்னையில் கடும் குளிர் நிலவி வருவது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கியுள்ளார். எப்போதெல்லாம் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் நிலவி வருகிறது. வீடுகள் நெருக்கமாக இருக்கும் இடங்களிலும் வீடுகளுக்கு பனி இறங்குகிறது. பொதுவாக மழை காலத்திலும் மார்கழி மாத்திலும்தான் குளிர் அதிகமாக இருக்கும் என்பார்கள்.
ஆனால் கடந்த 4 தினங்களாக மழையில்லாமல் வெயில் இருந்து வந்தது. ஆயினும் கடுங்குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களிலும் குளிர் இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுருக்கமாக சொன்னால் சென்னை நகரமே ஊட்டிபோல் மாறியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர் மாதத்தில் சென்னை ஊட்டியாவது இது முதல் முறையல்ல. 1976 ஆம் ஆண்டு முதலே இப்படி ஒரு சூழல் உள்ளது. மே மாதத்தில் புயலானது வங்கக் கடலில் உருவாகி அங்கேயே நிலவினால் அது வடக்கிலிருந்து வறண்ட காற்றை இழுக்கும். இதனால் நில பகுதியில் 40 செல்சியஸை வெப்பநிலை ஏற்படும்.

நவம்பர் மாதம்
அது போல் நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தமோ புயலோ தமிழக கடலோரத்தில் மழையை கொடுக்காமல் அப்படியே வெட்டியாக தங்கிருந்தால் என்ன நடக்கும் என்றால் கடுங்குளிர்தான். அதற்கு சிறந்த உதாரணம் சென்னை நேற்றைய தினம் ஊட்டியாக இருந்ததுதான். சென்னை போன்ற நகரங்களில் பகல் வேளைகளில் இரு வழிகளில் வெப்பநிலை குறையும். ஒன்று அதிகபடியான மழையின் போது! மற்றொன்று நிலத்திற்கு வராமல் வங்கக் கடலிலேயே காற்றழுத்தம் வெட்டியாக இருக்கும் போது!

நவம்பர் மாதம் குளிர்
சென்னையில் நவம்பர் மாதங்களில் குளிர்ந்த நாட்களின் பட்டியல் இதோ: கடந்த 1976 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி புயலால் 450 மி.மீ.மழை பெய்தது. அப்போது 23.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. அது போல் கடந்த 1985 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புயல் ஏற்பட்டு 350 மி.மீ. மழை பெய்தது. அன்றைய தினம் வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. 1988 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 24.1 டிகிரி வெப்பநிலை.

ஆழ்ந்த காற்றழுத்தம்
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி நேற்றைய தினம் போல் கடும் குளிர் நிலவியது. நுங்கம்பாக்கத்தில் 100 மிமீ மழை பெய்தது. 24.2 டிகிரி வெப்பநிலை இருந்தது. கடந்த 1988ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி 24.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ஒடிஸாவுக்கு சென்ற ஆழ்ந்த காற்றழுத்ததால் 24.5 டிகிரி வெப்பநிலை இருந்தது. 10.11.2002 -ஆம் ஆண்டு கனமழை பெய்தது, புயல் மேற்கு வங்கத்திற்கு நகர்ந்தது. இதனால் 24.6 டிகிரி செல்சியஸானது வெப்பநிலை.

ஒடிஸாவுக்கு காற்றழுத்தம்
நவம்பர் 1 ஆம் தேதி 1990 ஆம் ஆண்டு ஒடிஸாவுக்கு ஆழ்ந்த காற்றழுத்தம் சென்றதால் அன்றைய தினம் வெப்பநிலை 24.7 டிகிரியாக இருந்தது. 1986ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி சென்னையிலிருந்து வங்கதேசத்திற்கு புயல் நகர்ந்து சென்ற போது 24.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. 12.11.1987 ஆம் ஆண்டு 24.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. 22.11. 2022 ஆம் ஆண்டு உள்ளே வர மாட்டேனு அடம் பிடிக்கும் காற்றழுத்ததால் 24.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இவ்வாறு பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications