அதிக மழையால் தண்ணீர் வடிய தாமதம்! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொல்வது உண்மைதான்.. வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னையில் மழை நீர் தேக்கம் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சொல்வது சரியானது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலகியவுடன் சரியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆயினும் மழை இன்னும் தீவிரமடையவில்லை.

இதற்காக எந்த ஒரு காற்றழுத்தமும் இல்லாத நிலை உள்ளது. தற்போது பெய்யும் மழை வளிமண்டல சுழற்சியால் ஏற்படுகிறது. நாளை மத்திய அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2, 3 தினங்களாக சென்னையில் மழை பெய்த வண்ணம் உள்ளது. மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகளை பார்வையிட்டு தண்ணீரை வடிய வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அது போல் பல இடங்களில் வடிகால்கள் தூர்வாரப்பட்டதால் மழை நீர் சிறிது நேரத்தில் தானே வடிந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினும் ஒரு அறிக்கையில் சென்னை மக்கள் மழை பெய்தாலே வெள்ளம் வந்துவிடுமோ என்ற பயம் நீங்கிவிட்டது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாரிமுனையில் நடந்து வரும் மழைநீர் கால்வாய் இணைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்திருந்தார். அவர் கூறுகையில் சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 37 ஆக குறைந்துள்ளது என்றார்.
மெரினாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்த கடற்கரை தூய்மைப் பணியில் பங்கேற்ற ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் 6,150 மெட்ரிக் குப்பையை கையாண்டு வருகிறோம். தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக மக்கள் அதிலுள்ள சவால்களை புரிந்து கொள்கிறார்கள்.
திடீரென அதிகமாக மழை பெய்யும் போது கால்வாய், கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. அது போன்ற சூழலில் கூடுதலாக பம்புகள் பொருத்தி மழைநீர் வெளியேற்றப்படும் என்றார்.
இந்த தண்ணீர் தேக்கம் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் அதிக மழையின் போது தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது என மாநகராட்சி சொல்வது உண்மைதான். ஒரு மணி நேரத்தில் 80 முதல் 90 மி.மீ. மழை பெய்யும் போது தண்ணீர் வடிய 1 முதல் 2 மணி நேரம் ஆகும். சென்னை போன்ற சாய்வு நில அமைப்புள்ள நகரங்களில் மழை பெய்ததும் தண்ணீர் வடியும்படி எந்த அமைப்பும் வடிவமைக்கப்படவில்லை. மேலும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தண்ணீர் தேங்கியிருப்பதை நாம் வெள்ளம் என கூறுவதே தவறு. 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி பொருளாதார ரீதியில் இழப்பை ஏற்படுத்துவதுதான் வெள்ளம். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications