நவ.20 இல் சங்கு சக்கரம் வரும்.. ஆனால் நம் கடற்கரைக்கு வருமா? .. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்
சென்னை: இன்னும் 2 நாட்களில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தீவிரமடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், அண்ணாநகர்- பெரம்பூர் பெல்டில் நேற்று என்னா மழை! இரண்டாவது நாளாக நேற்றைய தினம் இந்தளவு மழையை பெற்றோம்.
காற்றால் இழுக்கப்படும் மேகங்கள் மூலம் காற்றழுத்தத்திலிருந்து நேற்று பெய்தது கடைசி மழை. 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான மழை நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. இன்று ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம்
கடந்த 4 நாட்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் 250 மி.மீ. - 300 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. சீர்காழியில் பெய்த மழை கடலோர பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் பெய்திருக்கலாம். சென்னையில் இப்படி ஒரு மழை பெய்திருந்தால் அதிக சேதத்தை சந்தித்தியிருக்கும்.

தமிழக கடலோரம்
வரும் 20ஆம் தேதி தமிழக கடலோரம் அருகே புயல் உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த இரு நாட்களில் காற்றழுத்தம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தீவிரமடைந்து புயலாக மாறலாம். ஆனால் தமிழக கடற்கரை அருகே வறண்ட காற்று நிலவி வருவதால் சற்று சாதகமான சூழல் ஏற்படுவது சற்று கடினம்தான். எனினும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

தூத்துக்குடி
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, கொடைக்கானல் பகுதிகளில் இன்றைய தினம் நல்ல மழை பெய்யும். திருவிக நகரில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 64.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் அண்ணா நகர் மற்றும் அண்ணா நகர் மலர் காலனியில் 42.9 மி.மீ. மற்றும் 56.1 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

வடமேற்கு பகுதி
சென்னையின் வடமேற்கு பகுதிகளான அண்ணாநகர் மேற்கு பகுதியில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இந்த கடைசி கட்ட மழை ஷெனாய் நகர், பாடி, அம்பத்தூர், அண்ணா நகர் மேற்கு மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்தது. சென்னையின் மைய பகுதிகளான மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, சேப்பாக்கம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

20 நிமிடங்களில் கனமழை
அது போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 19 அல்லது 20 தேதிகளில் அடுத்த மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 16 ஆம் தேதி முதல் காற்றழுத்தம் உருவாகும், 19 ஆம் தேதி அது தீவிரமடையத் தொடங்கும். திருவிக நகர், அண்ணாநகர் மேற்கு, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் 20 நிமிடங்களில் மிக கனமழை பெய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications