பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.. சூரியனை வழிபட்டு பொங்கலோ பொங்கல்! பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும், உலகத் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2 ஆம் நாள் மாட்டுப் பொங்கலும், தை மாதத்தின் 3வது நாள் காணும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டம்
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், பயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்" என உவகையுடன் கூறி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
தைத் திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரமாக, இன்றைய நாளில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. அதன் பின்னர், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உகந்த நேரம். நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொங்கல் வைத்து வீட்டில் பூஜை செய்து வழிபடலாம்.
பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று காலை முதல் இரவு வரை கடை வீதிகளில் ஜவுளி, கரும்பு, மஞ்சள், பழங்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து மட்டும் சொந்த ஊர்களுக்கு சுமார் 16 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதனால், சென்னையில் நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கலை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி பரவட்டும்
பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென பலரும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications