ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்.. ஸ்டாலினின் ஊராட்சி சபையை கலாய்க்கும் தமிழிசை
கிராம சபை குறித்து தமிழிசை சவுந்தராஜன் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஸ்டாலினின் கிராம சபைக்கூட்டத்துக்கு நேற்றே ட்வீட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அது சம்பந்தமான ட்வீட் பதிவிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை!! அதில் "ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்" என்றும், "ஓரங்கட்டப்படுவோம்" என்றும் அடுக்குமொழியில் பின்னி எடுத்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ரத்தானது வரை தமிழக பாஜக தலைவர்களிடமிருந்த வேகம் குறைந்து காணப்பட்டது.
ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் அறிவிப்பு சம்பந்தமான வேலைகளில் இறங்கியபோது, தன் கட்சி சார்பாக சரியாகவும் விவரமாகவும் பதிலளிக்காமல் ஒதுங்கி நழுவியது தமிழக பாஜக.
தாறுமாறு விமர்சனம்
குறிப்பிட்ட அந்த இடைத்தேர்தல் விவகார நேரத்தில் எல்லாம் பக்கத்து மாநில பினராயி விஜயனை பிடித்து தாறுமாறாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள்.
கிராம சபை கூட்டம்
இப்போது ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தினை தொடங்கி நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக அவர் நேற்றே தன் பணிகளை தொடங்கி விட்ட நிலையில், தமிழிசை இன்று இதுகுறித்து ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
ஓரங்கட்டப்படுவோம்
அதாவது, "கிராமசபைக்கூட்டம் பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்! ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்? வரும் காலத்தில் ஓரங்கட்டப்படுவோம் என்பதன் அறிகுறி? 5 முறை ஆண்ட திமுக! ஊழல்ஆட்சி! குடும்ப ஆட்சி! மறக்க முடியுமா? உரக்கச் சொல்வோம்! ஏமாற்ற வருகிறார்கள்! ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம்! வெல்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
பெரிய தாக்கம்
திமுக சம்பந்தமான பேச்சு எப்போது எடுத்தாலும், மறக்காமல், கவனமுடன் "ஊழல்" என்ற வார்த்தையை தமிழக மக்களிடம் கொண்டுபோய் தமிழிசை சேர்த்து வருகிறார் என்பதும், கிராம சபையில் "ஒற்றை ஆளாக" ஸ்டாலின் மக்களை சந்தித்து வருவது எதிர்க்கட்சிகளுக்குகூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் தமிழிசையின் இந்த ட்வீட் மூலம் தெரியவருகிறது.