அதெப்படி திமிங்கலம்.. 10 ரூபாய் குவாட்டர் பாட்டில் ரூ.140க்கு விற்பனை.. ஆனாலும் நஷ்டத்தில் டாஸ்மாக்
சென்னை: 10 ரூபாய்க்கு குவாட்டர் பாட்டிலை வாங்கி 140 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது டாஸ்மாக் நிறுவனம்.. ஆனாலும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் முறையே 161 கோடி ரூபாய், 69 கோடி ரூபாய், 83 கோடி ரூபாய் என நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அரசுக்கு வரிகள் மூலம் லாபத்தை அள்ளிக்கொடுக்கும் டாஸ்மாக் நஷ்டத்தை சந்திப்பது ஏன் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழ்நாட்டில் கலால் வரி மூலம் அரசுக்கு வரி வருவாய் கடந்த 10 வருடங்களில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் 20000 கோடியாக இருந்த மதுவால் வரும் லாபம் இப்போது 44 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது. வரும் 2024-25ம் நிதியாண்டில் 50000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் மற்றும் மதுபான கடைகள் மூலம் அரசு மிகப்பெரிய லாபம் ஈட்டி வருவதை இதன் மூலம் பார்க்க முடியும். ஆனால் மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கி வருகிறதாம். அது எப்படி திமிங்கலம் என்கிறீர்களா? ஆனால் உண்மை என்கிறது ஆர்டிஐ தகவல். வெறும் ஒரு ரூபாய் கமிஷனுக்காக டாஸ்மாக் நிறுவனம் மதுபாட்டில்களை விற்பனை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த புள்ளி விவரங்களை பாருங்கள்.
தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் ஒரு காலத்தில் இயங்கி வந்தன. இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் 180 மில்லி லிட்டர் (குவாட்டர்), 375 மில்லி லிட்டர் (ஆப்), 750 மில்லி லிட்டர் (புல்) என்ற அளவுகளில் பல்வேறு வகையான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மிகவும் அதிகமாக விற்பனையாவது குவாட்டர் எனப்படும் இதில், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாட்டில்கள் தான்.
தமிழ்நாட்டில் குவாட்டர் பாட்டில் 60 சதவீதமும், ஆப் பாட்டில் 25 சதவீதமும், புல் பாட்டில் 15 சதவீதமும் விற்பனை ஆவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மதுபானம் விற்பனை மூலம் அரசுக்கு 2020, 2021-ம் ஆண்டு ரூ.39 ஆயிரத்து 760 கோடியும், 2021, 2022-ம் ஆண்டு ரூ.42 ஆயிரத்து 421 கோடியும், 2022, 2023-ம் ஆண்டு ரூ.44 ஆயிரத்து 98 கோடியும் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் அரசுக்கு லாபத்தை அள்ளி வழங்கும் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியான ஒரு தகவலின் படி, டாஸ்மாக் நிறுவனம் 2020, 2021-ம் ஆண்டில் ரூ.161 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். 2021, 2022-ம் ஆண்டில் ரூ.69 கோடியும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 2022, 2023-ம் ஆண்டில் நஷ்டத்தின் அளவு சுமார் ரூ.83 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மது ஆலைகளில் இருந்து 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவாட்டர் பாட்டில் ரூ.10.35-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், அது டாஸ்மாக் கடையில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ரூ.140-ல், கொள்முதல் விலை மற்றும் கலால் வரி மற்றும் விற்பனை வரி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.139 போய்விடுமாம். மீதமுள்ள 1 ரூபாய் தான் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கிடைக்கிறதாம். இந்த ரூபாயை வைத்துக்கொண்டுதான், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம், கடை வாடகை, லாரி வாடகை போன்றவை கொடுக்க வேண்டியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால்தான் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததாக சொல்கிறார்கள்.
கடந்த லோக்சபா தேர்தல் காலத்தில் சோதனை அதிகமாக இருந்ததால், தமிழ்நாட்டில் அந்த மாதங்களில் மதுபானங்களின் விற்பனை 6 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை குறைந்துபோனதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் எனில் கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை கணிசமாக குறைந்து போனதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே டாஸ்மாக் கடைகள் குறைந்த அதே நேரத்தில் மனமகிழ் மன்றங்களில் மதுவிற்பனை அதிகமாக உள்ளதாம். தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் 680-ல் இருந்து 1,480 ஆக கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாம். இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்கள் மது அருந்துவதற்காக பார் வசதி உள்ளது. இங்கு அதிகப்படியான மதுபானங்கள் விற்பனையாவதாகவும், கணிசமான லாபம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கும் டாஸ்மாக், நஷ்டத்தை சரிகட்டும் வேலையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications