டாஸ்மாக் அடிதூள்.. ஒரே ஒரு அறிவிப்பில் "அப்ளாஸ்" வாங்கும் திமுக.. ஸ்பெஷல் டீமை இறக்கும் தமிழக அரசு
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் முத்துசாமியும் இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மரக்காணம் கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்பட்டு, திமுக அரசின் மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்தது.. உயிர்பலிகளுக்கு பிறகு, "பூரண மதுவிலக்கு தேவை" என்று வைகோ, திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களே வலியுறுத்த துவங்கிவிட்டனர்..
செந்தில் பாலாஜி: போதாக்குறைக்கு செந்தில் பாலாஜியின் "10 ரூபாய்" விமர்சனம் திமுக ஆட்சி மீதான விமர்சனத்தை அதிகரித்துவிட்டது. இதற்கு நடுவில், அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தது அதிருப்தியை மீண்டும் தந்துவிட்டது..
"காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள்.. எனக்கு கோவம் வரும்.. குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதில், அவர்களுக்கு ஆலோசனை சொல்லுங்கள்.. கடுமையான பணிச்சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது, அவர்களை குடிக்காரர்கள் என்று விமர்சிக்காதீர்கள்.. ஜாலியாக குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதில் தவறில்லை" என்றார் முத்துசாமி.
அன்புமணி: இதற்கு முதல்நபராக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் கூறியிருந்தார்.. "மக்கள் மத்தியில் மது பயன்பாட்டைக் குறைக்கும் வகையில்தான் மதுவிலக்குத் துறை செயல்பட வேண்டும். ஆனால், அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றார்.. இப்படி டாஸ்மாக் விவகாரத்தில் சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், அமைச்சர் முத்துசாமி அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக, "சிறிய வயதினர், முதல்முறையாக கடைக்கு வருவோரை கண்டறிந்து, அவர்களிடம் பேசி குடிப் பழக்கத்தை தடுக்கவும் ஊழியர்களை அறிவுறுத்தியிருக்கிறோம். அதுபோன்ற நபர்களின் பெயர், செல்போன் போன் பெற்று தந்தால், அவர்களுக்கு தனி கவுன்சிலிங் அளிக்கப்படும். இப்படி, அதிக அளவிலானோர் திருந்த ஏற்பாடு செய்தவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, கவுரவிக்கப்படுவார்கள்" என்று அறிவித்தார்.
மெல்ல விலகும் அதிருப்திகள்: மது குடிப்போரை திருத்தினால் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்தது, மக்களின் கவனத்தை ஈர்த்தது.. இதோ இப்போதும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார்..
அதில், தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார். பேருந்து பயணம், உரிமைத்தொகை அரசு, பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம் குடும்ப பெண்களுக்கு சுமையை குறைத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இப்படி ஒவ்வொன்றாக பெண்களின் நலன் கருதி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
டெங்கு பாதிப்பு: டெங்கு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டெங்கு பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தால் அந்த பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிவதற்காகவே, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக்கில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன கண்டறிந்து, அவைகளை தீர்ப்பதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு முழுமையாக அதைப்பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும்" என்று கூறியிருக்கிறார்.
மா.சுப்பிரமணியன்: கடந்த மாதம், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, "குடி மற்றும் போதை பழக்க பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் முறையிலும், மனோதத்துவ முறையிலும், மருத்துவ முறை சிகிச்சையுடன் கூடிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும்.
அது மட்டுமில்லாமல், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு 15 நாட்கள் அவர்கள் பகுதியிலேயே தங்கி இருந்து சிகிச்சை வழங்கப்படும். குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட பிறகு வேலைக்கான தகுதி இருந்தால், அரசு பணியில் கல்வி தகுதிக்கு ஏற்ப அவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள்" என்றார்..
குடிப்பழக்கம்: குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு வேலை என்ற இந்த அறிவிப்பாகட்டும், முதல்முறையாக டாஸ்மாக் வந்து குடிக்கும் சிறிய வயதினருக்கு கவுன்சிலிங் தருவதாக வெளியான அறிவிப்பாகட்டும், டாஸ்மாக் பிரச்சனைகளை களைய தனிக்குழு நியமித்துள்ளதாகட்டும், இவை அனைத்துமே மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அத்துடன், டாஸ்மாக் விவகாரத்தில், திமுக அரசு மீதான அதிருப்திகளும் மெல்ல உடைந்து கீழே விழ ஆரம்பித்துள்ளன..!!!












Click it and Unblock the Notifications