ஜெ.வை கும்பிட்டு.. ஜெ ஜெ என முடிவு.. பாஜகவிற்கு நன்றி.. மீண்டும் வராதீங்க.. எடப்பாடி துணிஞ்சிட்டாரே!
சென்னை: அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மிக துணிச்சலாக பாஜக கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதெல்லாம் அடிச்சிப்பாங்க.. ஆனால் மீண்டும் சேர்ந்துவிடுவாங்க என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் பாஜக - அதிமுக மோதலை மிக சீரியஸாக எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் உள்ள கூட்டணியை முறித்து உள்ளார்.

அண்ணாமலை கூட.. அண்ணாவை விமர்சனம் செய்து பேசிய போது நமக்கு எதிர்ப்பு வரும் என்று நினைத்து இருப்பார். ஆனால் கண்டிப்பாக கூட்டணி உடையும் என்று நினைத்து இருக்கவே மாட்டார். அந்த தைரியத்தில்தான் அவரும் பேசி இருப்பார். ஆனால் அண்ணாமலைக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கூட்டணியை முறிப்பதாக எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்குகள், டெண்டர் வழக்குகள், சிபிஐ வழக்குகள் உள்ளனர். அவருக்கு எதிராக வழக்கு பதிய ஆளுநர் ரவியும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இப்படி இருக்க பாஜகவுடன் மோதல் போக்கை எடப்பாடி கடைபிடிக்க மாட்டார் என்றே கருதப்பட்டது.
ஆனால் அதை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடிவு செய்துள்ளார். இன்று அதிமுக கூட்டத்திற்கே எடப்பாடி பழனிச்சாமி தீர்க்கமாகவே வந்துள்ளார். ஜெயலலிதாவை கும்பிட்டுவிட்டு உள்ளே எடப்பாடி சென்ற நிலையில், 10 நிமிட கூட்டத்தில் இந்த கூட்டணியை முறிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து #நன்றி_மீண்டும்வராதீர்கள்'' என்ற ஹேஷ்டாக்கை சமூகவலைதளத்தில் அதிமுகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது., என்றும் அறிவித்துள்ளனர் .












Click it and Unblock the Notifications