அதிமுக மீது பாயத் தயாராகும் பாஜக! அண்ணாமலை அமைதி காப்பதன் பின்னணி என்ன? பரபரக்கும் அரசியல் களம்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை அதிமுக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக உணர்த்திவிட்ட நிலையில், பதிலடி கொடுப்பதற்கு பாஜக தரப்பு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசியக் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் மத்தியில் எந்த அரசு இருந்தாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது எனவும் பேசி போகிற போக்கில் காங்கிரசுடன் சேர்த்து பாஜகவையும் அட்டாக் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை தனித் தீர்மானமாகவே கொண்டு வந்து பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழுவில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார். அதேபோல் திமுக தரப்பிலும் ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை விடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆனால் பாஜக தரப்பில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தோ எடப்பாடி பழனிசாமி பேச்சு பற்றியோ எந்த ரியாக்ஷனையும் யாரும் வெளிக்காட்டவில்லை. பாதயாத்திரை நிகழ்ச்சியில் பேசும் போது கூட அண்ணாமலை அதிமுக பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை.
ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பிறகு அதிமுக -பாஜக இடையேயான வார்த்தைப் போர் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கடுமையாக முயற்சித்து வந்தனர். ஆனால் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி எடுத்த நிலைப்பாடு அவர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதால் அதற்குள் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என இன்னும் கூட இரண்டுக் கட்சிளின் நலன் விரும்பி பிரமுகர்கள் சிலர் நம்பிக்கை குறையாமல் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ முன் வைத்த காலை பின் வைக்கவே மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் இனிமேல் தான் தமிழக அரசியல் களம் அனல் பறக்கவுள்ளது.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இதற்கு முன் 2 விவகாரங்களில் எடுத்த முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவுக்கு வேண்டாம் என்று ஒதுக்கினார். அதன் பிறகு யார் யாரோ எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் இருவருடனும் கடைசி வரை சமாதானம் ஆகவில்லை.
அதே போல் தான் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்திலும் வேண்டாம் என்றால் வேண்டாம் என்ற முடிவோடு உள்ளார். இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என பாஜக மேலிட பிரமுகர்களே பேசிப்பார்த்தும் எடப்பாடி பழனிசாமி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அதேபோல் தான் இப்போது பாஜக கூட்டணி விவகாரத்தில் தாம் எடுத்த முடிவிலிருந்து அவர் மாற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications