மாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு
சென்னை: திருச்சி மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் கே.என்.நேரு கடந்த 27 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு முதன்மைச் செயலாளர் என்ற பதவி உயர்வு கொடுத்துள்ளதால், அவரிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி இந்த வாரத்தில் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
என்னதான் தனக்கு முதன்மை செயலாளர் பதவி கிடைத்திருந்தாலும் கூட, தன்னிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி போகப்போவதை நினைத்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அவரது புகைப்படம் முன்பு மண்டியிட்டு கதறி அழுதுள்ளார்.

மதிமுக
திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவை தொடங்கிய போது, திமுகவில் இருந்து 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் சென்றனர். அதில் திமுக திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த திருச்சி செல்வராஜும் ஒருவர். அவர் வைகோ பின்னால் சென்றால், திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் திமுகவின் சோழ மண்டல தளபதி என வர்ணிக்கப்படும் கோ.சி.மணி கே.என்.நேருவை மாவட்டச் செயலாளராக்கலாம் என கருணாநிதியிடம் சிபாரிசு செய்தார்.

ஒன்றிய சேர்மன்
லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் தான் கே.என்.நேருவின் சொந்தக் கிராமம். இன்றும் அந்த கிராமத்தில் தான் நேரு குடும்பத்துக்கு சொந்தமான தோட்டங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பரந்து விரிந்து உள்ளன. நேருவின் தந்தை நாராயணன் ரெட்டியார் காங்கிரஸ் அனுதாபியாக இருந்தவர். அதன் வெளிப்பாடாகவே தனது மூத்த மகனுக்கு ஜவஹர்லால் நேரு நினைவாக நேரு என பெயர் சூட்டினார். நேரு பள்ளிப்படித்த காலம் தொட்டே கருணாநிதி மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக திமுக அனுதாபியாக இருந்து வந்தார். வசதியான குடும்ப பின்புலத்தை கொண்டிருந்ததால் எப்போதும் மைனரை போல் புல்லடிலேயே அவர் வலம் வருவார். அவருக்கு புல்லட் நேரு என்ற பெயரும் ஒரு காலத்தில் இருந்தது.

அமைச்சர்
கே.என்.நேருவின் அரசியல் பயணம் என்பது புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன், ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ, அமைச்சர், மாவட்டச் செயலாளர், முதன்மைச் செயலாளர், என படிப்படியாகவே வளர்ச்சியடைந்த ஒன்றாகும். பொதுவாகவே நேருவை பொறுத்தவரை தனது மகன் மற்றும் ஒரு தம்பி சென்னையில் தொழில் செய்தாலும் கூட, அவர் சென்னையில் தங்குவதை அதிகம் விரும்பாதவர். எப்போதும் திருச்சியில் இருக்க வேண்டும், தொண்டர்கள் தன்னை சுற்றி வர வேண்டும் என நினைப்பவர். ஆனால், காலம் அவரை சென்னையில் தங்க வைத்துள்ளது. ஆம், முதன்மைச் செயலாளர் பதவி என்பது, ஊர் சுற்றுவதற்கானதல்ல. தினமும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து மாநிலம் முழுவதும் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள கடிதங்களை படித்து பார்த்து, பஞ்சாயத்து செய்து வைக்க பொறுப்பு நேருவுக்கு ஏற்பட்டுள்ளது.

கதறி அழுகை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானதை அடுத்து தனது நண்பர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார். அது ஆனந்தக் கண்ணீரா இல்லை சோக கண்ணீரா எனப் புரியாமல் நேருவின் ஆதரவாளர்கள் குழம்பி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications