ராட்வீலர் பஞ்சாயத்தே இன்னும் ஓயல..சைபீரியன் ஹஸ்கி கடித்து சிறுவன் காயம்..ஆர்டர் போட்டும் கேக்கலையே!
சென்னை : சென்னையில் ராட்வீலர் வகை நாய்கள் சிறுமியை கடித்த அதிர்ச்சி சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில் சென்னை ஆலந்தூரில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் சிறுவனை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவருடன் அவரது மனைவி சோனியா 5 வயது மகள் சுதக்ஷா ஆகியோர் அங்கேயே தங்கியிருந்தனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று ரகு விழுப்புரம் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகளும் மனைவியும் அங்கே இருந்தனர். இந்நிலையில் காலையில் பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி தான் வளர்க்கும் இரண்டு ராட்வீலர் வகை நாய்களுடன் பூங்காவுக்கு நடை பயிற்சிக்குச் சென்றார்.
அதிர்ச்சி சம்பவம்: அப்போது சுதக்ஷாவை இரண்டு நாய்களும் கடித்துக் குதறின. அப்போது அதனை புகழேந்தி வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய சுற்றறிக்கை அனுப்பியது. அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும்.. வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்: மேலும் வாயை மூடி அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி அளிக்க வேண்டும், பூங்காவிற்குள் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு கொண்டுவர வேண்டும். இவை அனைத்தையும் அந்த பூங்காவின் காவலர் கடுமையாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாய்கடி: இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அஸ்வந்த். இவர் ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் அவரது அத்தை வீட்டுக்கு கோடை விடுமுறையை கழிக்க வந்துள்ளார்.
வழக்குப் பதிவு: இந்த நிலையில் நேற்று மாலை அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதே பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் சைபீரியன் ஹஸ்கி வகை நாய் ஒன்று திடீரென சிறுவன் அஸ்வந்தை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே காயம் அடைந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரின் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications