இதே நிலை நீடித்தால் ரொம்ப கஷ்டம்! உடனே இதை செய்தாகனும்! மின்சார வாரியத்துக்கு ராமதாஸ் முக்கிய யோசனை!
சென்னை: நிலக்கரி பற்றாக்குறை நீடித்தால் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகலாம் என எச்சரித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
கூடுதல் கப்பல்களை ஏற்பாடு செய்து ஒதிஷாவிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் உற்பத்தி தொடர்பாக ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிலக்கரி பற்றாகுறை குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அனல் மின் நிலையங்கள்
நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில் மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக 2240 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது.

60,000 டன் நிலக்கரி
தமிழகத்தின் 5 அனல் மின் நிலையங்களுக்கு தினமும் 60,000 டன் நிலக்கரி தேவை. ஆனால், 30,000 டன் மட்டும் தான் நிலக்கரி வருகிறது. ஒதிஷாவின் பாரதிப் துறைமுகத்தில் நிலக்கரி குவிந்து கிடக்கும் போதிலும், ஏற்றி வருவதற்கு கப்பல்கள் இல்லாததே பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடும் பாதிப்பு
நிலக்கரி பற்றாக்குறை நீடித்தால் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அது மின்சார வாரியத்தை கடுமையாக பாதிக்கும். இல்லாவிட்டால் கடுமையான மின்வெட்டு ஏற்படும். மக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.

கூடுதல் கப்பல்கள்
கூடுதல் கப்பல்களை ஏற்பாடு செய்து ஒதிஷாவிலிருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அனல் மின் நிலையங்களை முழு அளவில் இயங்கச் செய்து முழு அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications