சிபிஎஸ்இ பள்ளிகளில் அமலாகும் அதிரடி நடைமுறை.. 3, 5, 8 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில்
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கட்டாய தேர்ச்சி முறை தற்போது மாற்றப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறைக்கு ஒப்புதல் கடிதம் வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்ற நடைமுறை உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது 5, 8 ஆம் வகுப்புகளில் மதிப்பெண் குறைந்த அளவில் பெற்றால் ஃபெயில் ஆக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றோர்களிடம் இருந்து பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்திற்கு குறைவாக மாணவர்கள் மதிப்பெண் பெற்றால் ஃபெயில் ஆக்குவதற்கான நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதற்கான சுற்றறிக்கை மார்ச் 18 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, தேசிய கல்விக் கொள்கை 2020 இல் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற நடைமுறை மாணவர்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு தொடர்ந்து அந்த கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
சிறு குழந்தைகளின் கல்விக் கனவை தகர்க்கும் நடவடிக்கை என்றும், தேர்வு என்றாலே என்ன என்று தெரியாத மாணவர்களுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 9 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நிலை இருந்து வந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறைக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் மாதத்திற்கு முன்பே முழு ஆண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்றதால், அடுத்த வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. எனவே, இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications