கருணாநிதி சென்டிமென்ட்.. இஸ்லாமியர்கள் அதிகம்.. சேப்பாக்கம் தொகுதியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உதயநிதி
சென்னை: இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும், சென்னைக்குள்ளேயே இருப்பதாலும் சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட உதயநிதி முடிவெடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டன. அதிமுக இரண்டு கட்டங்களாகத் தனது வேட்பாளர்களை அறிவித்தது.
உதயநிதி போட்டி
அதேநேரம் திமுக ஒரே கட்டமாக நேற்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 10ஆவது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியில் களமிறங்குகிறார்.
போட்டி இல்லை
சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவார் எனக் கடந்த சில மாதங்களாகவே செய்திகள் உலா வர தொடங்கின. அதேபோல உதயநிதியை தவிர சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியில் வேறு யாரும் திமுகவில் விருப்ப மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன் உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தகவல் வெளியானது.
காரணம் என்ன
ஆனால் அப்போதே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்த தகவலை மறுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடலாம் என்றும் செய்திகள் உலாவந்த நிலையில், அவர் சேப்பாக்கம் திருவெல்லிக்கேனியை தேர்வு செய்துள்ளார். இதற்குப் பின் சில முக்கிய காரணங்கள் உள்ளன.
கருணாநிதி நினைவிடம்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான் உள்ளது.இதனால் இங்கிருந்து முதலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சென்டிமென்டாக வோர்க் அவுட் ஆகும் என உதயநிதி நினைக்கிறார்.
இஸ்லாமியர்கள் அதிகம்
மேலும், தமிழ்நாட்டிலேயே வாணியம்பாடிக்கு அடுத்து சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி பகுதிகளில்தான் உருது பேசும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இந்த முறை அதிமுக சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது. அக்கட்சியில் இருந்து கஸ்ஸாலி என்பவர் போட்டியிடுகிறார். இருப்பினும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால். இஸ்லாமியர்களின் வாக்குகளை மொத்தமாகப் பெற்றுவிட முடியும் என உதயநிதி கருதுகிறார்.
சிறிய தொகுதி
சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதி சென்னைக்குள் இருப்பது மற்றொரு காரணம். சென்னையில் தான் வலுவாக இருப்பதாகவே திமுக கருதுகிறது. சென்னைக்குள்ளேயே இருப்பதால் பிரசார பணிகளை எளிதில் மேற்கொள்ளலாம், வெற்றி பெற்றாலும்கூட, தொகுதியைக் கவனித்துக்கொள்வதும் எளிது. அதேபோல சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி சிறிய தொகுதி. ஒரே நாளில் ஒட்டுமொத்த பிரச்சாரத்தையும் முடித்துவிடலாம். இதையெல்லாம் மனதில் வைத்தே உதயநிதி, சேப்பாக்கம் திருவெல்லிக்கேனி தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.