செம மழை பெய்யும்... அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக அந்த மையத்தின் அதிகாரிகள் கூறுகையில், தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி நகர்ந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், 26-ந்தேதிக்கு பிறகு காற்றின் தன்மையை பொறுத்து, தாழ்வு பகுதியின் நிலையை அறியமுடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே போல், மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலபிரதேசம் உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக கொங்கன் கோவா, மத்திய மகாராஷ்டிரா, வடக்கு குஜராத் உள்ளிட இடங்களில் பருவமழை தீவிரம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.