"பாகன் மீது வைத்த பாசத்தால் தெய்வானை யானை அவரை தட்டி எழுப்ப முயற்சித்தது”: அமைச்சர் சேகர்பாபு
சென்னை: "திருச்செந்தூர் கோயில் யானை தாக்கிய விவகாரம், ஒரு எதிர்பாராத நேரத்தில் நடந்த உணர்ச்சிவசமான சம்பவமாகத்தான் பார்க்கிறோம். அந்த துயரமான சம்பத்துக்கு பிறகு, அடுத்த 10 நிமிடங்களிலேயே, பாகன் மீது வைத்த பாசத்தின் காரணமாக யானை அவரை தட்டி எழுப்ப முயற்சித்தது." என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த யானை தெய்வானை. கடந்த 18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் யானை குடிலில் இருந்தனர். அப்போது யானை தாக்கியதில் சிசுபாலன், உதயகுமார் ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்து துதிக்கையில் முத்தமிட்டபோது தெய்வானை யானை, ஆக்ரோஷத்தில் சிசுபாலனை தாக்கியுள்ளது. அவரை காப்பாற்ற முயன்ற உதவி பாகனான உதயகுமாரையும் தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வனத்துறை மற்றும் கால்நடை துறையின் தீவிர கண்காணிப்பில் யானை குடிலில் பாதுகாப்பாக உள்ளது.
சம்பவம் நடந்த அன்று தெய்வானை யானை சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்தடுத்த நாட்களில் உணவு எடுத்துக் கொண்டது. தற்போது யானை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யானை வழக்கமான செய்கைகளை செய்யத் தொடங்கிவிட்டது.
யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததால், அந்த யானையை சிறிது காலம் முதுமலை அல்லது திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெய்வானை யானை பாகன் உதயகுமாரை தேடுவதாகக் கூறப்படுகிறது.
தெய்வானை யானை, பாகன் உதயகுமாரை தாக்கியதில் அவர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு மண்டியிட்டு உதயகுமாரை தட்டி எழுப்ப முயன்றுள்ளது தெய்வானை யானை. யார் என்பதை உணராமலேயே உதயகுமாரை யானை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கிய விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "திருச்செந்தூர் கோயில் யானை தாக்கிய விவகாரம், ஒரு எதிர்பாராத நேரத்தில் நடந்த உணர்ச்சிவசமான சம்பவமாகத்தான் பார்க்கின்றோம். செல்ஃபி எடுக்க அந்த யானை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து முயன்றதால் கோபத்தில் தாக்கிவிட்டது.
அந்த துயரமான சம்பத்துக்கு பிறகு, அடுத்த 10 நிமிடங்களிலேயே, பாகன் மீது வைத்த பாசத்தின் காரணமாக யானை அவரை தட்டி எழுப்ப முயற்சித்தது. எனவே உணர்ச்சிவசப்பட்ட சூழலில் நடந்தது தான் அந்தச் சம்பவம். பின்னர் குளியல் தொட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
27 கோயில்களில் 28 யானைகள் இருக்கின்றன. அவற்றுக்கு குளியல் தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, தேவையான உணவுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன. யானைகளை தெய்வத்துக்கு நிகராகத்தான் பேணி பாதுகாத்து வருகிறோம்.
உயிரிழந்த பாகனின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சமும், மற்றொரு நபரின் குடும்பத்துக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் நிதி உதவியாக திருக்கோயில் சார்பில் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளை நானே திருச்செந்தூருக்கு நேரடியாக சென்று நிதியுதவியினை வழங்கி முதல்வர் சார்பில் ஆறுதல் கூற இருக்கிறேன். பலியானவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதே திருச்செந்தூர் கோவிலில் பணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றும்" என சேகர்பாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications