உதயநிதி மட்டும் தான் இருக்கிறாரா? திமுகவில் வேறு சீனியர்களே இல்லையா.. பாய்ந்து வந்த பாஜக தமிழிசை
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல எனவும் மோசமான முன்னுதாரணம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு திட்ட வளர்ச்சித்துறை பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:-

உதயநிதியை துணைமுதல்வராக்க வேண்டும் என கூட்டணி கட்சிகளை திமுக தூண்டி விட்டுள்ளது. பவள விழா கொண்டாடிய திமுக, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என கட்சியினரை சொல்ல வற்புறுத்தியுள்ளது. இது ஜனநாயகமா அல்லது குடும்ப ஆட்சியா என்று நான் கேட்க விரும்புகிறேன். இது மோசமான முன்னுதாரணம். தமிழக அரசியலுக்கு இது நல்லதல்ல.. தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் இதுதான் ஜனநாயகமா?
உதயநிதி பிறக்கும் முன்பே கட்சிக்காக பல தலைவர்களும் உழைத்து இருக்கிறார்கள். அதனால்தான் கட்சியின் பவளவிழாவை அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் மூத்தவர்களுக்கு என்ன ஆனது? பொன்முடிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீக்கப்பட்டது ஏன்? அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் உள்ளதா? முதல்வர் இதற்கு பொறுப்பு இல்லையா? வெறுமனே கைகளை கழுவிவிட்டு செல்கிறாரா..
சமூக நீதி என்ன ஆனது? சமூக நீதி பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின், தலித் எம்.எல்.ஏ துணை முதல்வராக ஆக்கியிருக்க வேண்டும்.. ஆட்சியில் பங்கு என திருமாவளவன் கூட பேசி வருகிறார். அவருக்கு அதிகாரம் பகிர்ந்து கொடுப்பதில் உங்களை எது தடுக்கிறது. நீங்கள் தான் திறந்த மனதுடன் அடிக்கடி சமூக நீதி பற்றி பேசுகிறீர்கள். பெண் அதிகாரம் பற்றி பேசுகிறீர்கள்..ஆனால் புதிதாக எந்த ஒரு பெண் எம்.எல்.ஏவுக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. சம வாய்ப்பு கொடுக்கவில்லை.. உதயநிதி மட்டும்தான் தகுதியானவரா?
செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சராக்க என்ன அவசரம். நீங்கள் ஊழலை பற்றி கவலைப்படவில்லை. இது தமிழ்நாடு அரசியலுக்கு மிக மோசமான முன்னுதாரணம். நிச்சயமாக திமுக கட்சியினர் மத்தியிலும் சீனியர் அமைச்சர்கள் மத்தியிலும் நிச்சயமாக குழப்பம் ஏற்படும். தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் நிச்சயம் ஒருநாள் கொந்தளிப்பு ஏற்பட போகிறது.
ஏனெனில், கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் மட்டுமே அவர் துணை முதல்வராக ஆக்கப்பட்டு இருக்கிறார். எங்கு சம வாய்ப்பு உள்ளது. இது மிக தவறான முன்னுதாரணம். தமிழக அரசியலுக்கு இது நல்லதல்ல" என்றார். தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்க்ளுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பதவியேற்க உள்ளனர்.
அதேபோல 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல, சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications