ரிதன்யா வழக்கில் இந்த ஒரு ஆதாரம் போதும்.. கொம்பனாலும் அசைக்க முடியாது! பொன்மாணிக்க வேல் பளீச்
சென்னை: தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா, தனக்கு மெண்டல் டார்ச்சர் யார் கொடுத்தார், உடல் ரீதியான டார்ச்சர் யார் கொடுத்தார் என்பதை எல்லாம் தெளிவாக பேசி உள்ளார். வேறு எதையும் அவர் பேசவில்லை. அந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் போனில் இருந்தே போலீசார் எடுத்துள்ளனர்.. இதுவே போதும் என்று முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அவரின் பெற்றோரை இன்று முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் சந்தித்தார்.
ரிதன்யா தற்கொலை மர்மம்
இதன் பின் முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் அளித்த பேட்டியில், ரிதன்யா தற்கொலை முடிவை எடுக்கும் முன் பேசிய ஆடியோவை கேட்டேன். தற்கொலை முடிவை எடுக்கும் சில வினாடிகளுக்கு முன் அவர் பேசி இருக்கிறார். அதை அப்பாவிற்கு அனுப்பி இருக்கிறார். அதை கேட்ட பின்புதான் ஆறுதல் சொல்ல வேண்டும். தனிப்பட்ட வகையில் துணையாக இருக்க வேண்டும் என்று இங்கே வந்தேன். ரிதன்யா அப்பாவிற்கும் எனக்கும் பழக்கம் இல்லை. ஆறுதல் சொல்ல வேண்டும் என்று இங்கே வந்தேன்.

என்னிடம் எப்ஐஆரை படித்து காட்டினார்கள். அந்த பாப்பா இறந்ததற்கு பின் பேசிய அந்த ஆடியோ மிக முக்கியமானது. மிக முக்கியமான மின்னணு ஆதாரம். எந்த கொம்பன் வந்தாலும் அந்த ஆதாரத்தை உடைக்க முடியாது. அது மிக முக்கியமானது . எந்த பெரிய டிபன்ஸ் லாயர் வந்தாலும் அதை உடைக்க முடியாது. தற்கொலைக்கு சில நிமிடங்களுக்கு முன் பேசி உள்ளார்.
மெண்டல் டார்ச்சர் யார் கொடுத்தார், உடல் ரீதியான டார்ச்சர் யார் கொடுத்தார் என்பதை எல்லாம் தெளிவாக பேசி உள்ளார். வேறு எதையும் அவர் பேசவில்லை. அந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் போனில் இருந்தே போலீசார் எடுத்துள்ளனர். கோர்ட்டிற்கு கொடுத்துவிட்டனர். அங்கிருந்து லேபிற்கு சென்றுவிடும். அதை வைத்தே முடிவை கண்டுபிடிக்கலாம்.
இனி இதில் எதுவும் ஏமாற்ற முடியாது. வழக்கு நடந்தால் இந்த 1 ஆதாரம் போதும். அதை வைத்தே தீர்ப்பை வழங்க முடியும். தண்டனையை கொடுக்க முடியும். ஆர்டிஓ கொஞ்சம் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும். அது டெக்னிக்கல் சோதனை ரிப்போர்ட் எல்லாம் கிடைத்தால் எல்லாம் மாறிவிடும். இதில் எஸ்பி இறங்கி விசாரிக்க வேண்டும். அது இந்த குடும்பத்திற்கு கூடுதல் ஆதரவாக இருக்கும், என்று முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ரிதன்யா வழக்கு
ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ரிதன்யாவிற்கு நேர்ந்த கொடுமை
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது ரிதன்யா, "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும்" கூறியுள்ளார். அடுத்த நாளே கோவிலுக்கு சென்றவர் அங்கேயே காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications