"தோழி" விடுதிகள்.. தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் அமைகிறது.. தங்கம் தென்னரசு மேஜர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதை உறுதி செய்யும் வகையில் தோழி விடுதிகளை திமுக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது. இதற்கு நல்ல வரவேற்பு இறுக்கும் நிலையில், மேலும் 10 இடங்களில் தோழி விடுதி அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்த சமயத்தில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவே தான் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்த பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாகப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தோழி தங்கும் விடுதிகளும் மேலும் 10 இடங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணுக்கிங்கே பெண் நிகர்
அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும், "ஆணுக்கிங்கே பெண் நிகர் எனும் சரிநிகர் சமத்துவப் பாதையில் மகளிர் நலனுக்காக பல்வேறு முன்னோடி நலத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிருக்குச் சொத்துரிமையும், கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடும் அளித்த கருணாநிதி வழியில் முதலமைச்சர் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மகளிரின் முன்னேற்றத்திற்குப் பல புதுமையான திட்டங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது.
புதுமை பெண் திட்டம்
ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவியர் உயர்கல்வி பயில்வதை உறுதிசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தற்போது நான்கு இலட்சத்து ஆறாயிரம் மாணவியர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து. கூடுதலாக 40,276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பதைப் பெருமையுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறேன் வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தோழி விடுதிகள்
தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி' பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே தாம்பரம். திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எதிர்வரும் நிதியாண்டில் காஞ்சிபுரம். ஈரோடு கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் நோக்கத்துடன் நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு, வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
மாணவியர் விடுதிகள்
தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருந்தும் மாணவியர் தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்கிடும் வகையில் பெருநகரங்களுக்கு வருகை புரியும்போது அவர்களுக்குத் தரமிக்க மற்றும் பாதுகாப்பான விடுதி வசதிகள் அமைத்திட வேண்டிய தேவையை அரசு உணர்ந்துள்ளது. எனவே, எதிர்வரும் நிதியாண்டில், சென்னை கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தால் பராமரிக்கப்படவிருக்கும் இவ்விடுதிகளின் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications