ஒலிம்பியாட் டீசரில் விஸ்வநாதன் ஆனந்த் எங்கே? வெறும் விளம்பரம்.. முதல்வருக்கு அண்ணாமலை அட்வைஸ்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் திமுக ஆட்சியை போல் பொருளின்றி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது.
ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கு ஏற்பாடும் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை
இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து உள்ளது அரசு. பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடித்து உள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த விளம்பர படத்தில் நடனமாடி இருக்கிறார்.

ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்
இந்த விளம்பர படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்க தரையில் சதுரங்க காய்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருவதைபோன்றும், கருப்பு வெள்ளை நிற ஆடையணிந்தவர்கள் நடனமாடுவதை போன்றும் இது படமாக்கபட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் சில வினாடிகள் தோன்றுகிறார். அதிதி ஷங்கர் மாமல்லபுரத்தில் நாட்டியமாடுகிறார்.

அண்ணாமலை விமர்சனம்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விளம்பர படத்தை விமர்சித்துள்ளார். அதில், "செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இல்லையா? திமுக அரசை போன்ற இந்த விளம்பரத்தில் எந்த பொருளும் இல்லை. வெறும் காட்சி மட்டும்தான். கடவுளின் பொருட்டாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலிழந்து கிடக்கும் ஆட்சியின் மீது தனது கவனத்தை செலுத்தட்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications