6 வருசத்துல ஒரே ஒரு முறைதான்.. எங்க கஷ்டத்தை எப்படி சொல்றது? - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை : மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் கவுன்சில் கூட்டம் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது என்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் மத்திய - மாநிலங்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவற்றிற்கிடையே எழும் ஒத்துழைப்பையும், கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சிலின் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த கூட்டம் ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது. அதாவது 16-7-2016 அன்று டெல்லியில் நடத்தப்பட்டது.

கவுன்சில் கூட்டத்தின் நோக்கம்
அரசியலமைப்பின் 263 வது பிரிவு மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை நிறுவுவதற்கு வழங்குகிறது, இது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பொதுவான நலன்களைக் கொண்ட பாடங்களைப் பற்றி விவாதிக்க அமைக்கப்பட்டதாகும். மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுந்துள்ள வேறுபாடுகளை களைவதற்கு மாநிலங்களையும் யூனியனையும் ஒரு பொதுவான மேடையில் கொண்டு வருவதே இதன் நோக்கம்.

கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த
மாநிலங்களுக்கிடையேயும், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயும் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த கவுன்சில் ஒரு முக்கிய கருவி. மாநிலங்களை பாதிக்கக்கூடிய, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு மசோதாவும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதிக்கும் பல மசோதாக்கள், அதன் தகுதியை விவாதிக்கவும், மாநிலங்களின் கவலையை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகளுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

3 மாதங்களுக்கு ஒருமுறை
இதன் விளைவாக, ஒட்டுமொத்த தேசத்திற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டின்போது, மாநிலங்களின் கருத்துக்கள், கவலைகள் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் மத்திய அரசால் சரியாகக் கேட்கப்படுவதில்லை. எனவே கவுன்சில் கூட்டம் சரியாக கூடினால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். எனவே, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications