வேளச்சேரி டூ கோயம்பேடு.. வழியில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதல்வரின் கான்வாய்!.. வீடியோ வைரல்!
சென்னை: சென்னை வேளச்சேரியிலிருந்து கோயம்பேடுக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் வழி விட்டு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆம்புலன்ஸ் வாகனங்கள் மனித உயிரை காக்க ஜெட் வேகத்தில் செல்லும் வாகனங்களாகும். ஒரு நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் விஷயத்தில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை கூட்டி கொண்டே செல்லும்.
இதற்காகத்தான் பெருநகரங்களில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடும்படி போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அது போல் பல வாகன ஓட்டிகளும் இவ்வாறு செய்கிறார்கள்.

ஓரமாக
இன்னும் சிலர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தி அது சென்றபிறகுதான் செல்வார்கள். ஆனால் சிலர் மட்டும் அலுவலகத்திற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்தால் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுவதே இல்லை. அப்படியே யாராவது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவர்கள் பறப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

ஸ்டாலின் செயல்பாடுகள்
இப்படியிருக்கும்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதம் காரில் விமான நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் முதல்வர் கார் சென்றபோது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்தது.

ஆம்புலன்ஸுக்கு வழி
உடனே ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு தனது டிரைவரிடம் கூறியதை அடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் முன்னால் சென்றவுடன் சிறிது நேரம் கழித்து முதல்வர் வாகனம் புறப்பட்டது. இதை சென்னை மாநகர காவல் துறை வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இது பலரது பாராட்டுகளையும் பெற்றது.

4 கி.மீ. சுற்று
அது போல் முதல்வராக பதவியேற்ற சில நாட்களில் சென்னை தேனாம்பேட்டையில் சித்தரஞ்சன் சாலை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் வழியாக அண்ணா அறிவாலயம் செல்லாமல், டிடிகே வழியாக நேராக கதீட்ரல் ரோடு, அண்ணா மேம்பாலம் வழியாக 4 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்று வந்தார். இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் தனது கான்வாய் வாகனம் வழக்கமான வழியில் சென்றால் பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் ஏராளமான சாலையோர கடைகளை அகற்றிவிடுவார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தனது வழியை மாற்றிக் கொண்டு 4 கி.மீ. தூரம் சுற்றிக் கொண்டு அறிவாலயம் செல்கிறார்.

96ஆவது பிறந்தநாள்
அது போல் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்தநாளின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வாகனம் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12 இலிருந்து 8 ஆக குறைக்கப்பட்டது. மேலும் தனது கான்வாய் கடக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதை
இதனால் முதல்வர் செல்லும் பாதைகளில் அவர் கான்வாய் கடந்து செல்வதற்காக தாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்படவில்லை என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அப்போது முதலில் வேளச்சேரியில் பாலத்தை திறந்து வைத்தார்.

கோயம்பேடு கான்வாய்
பின்னர் வேளச்சேரியிலிருந்து கோயம்பேடு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. உடனே ஆம்புலன்ஸுக்கு முதல்வரின் கான்வாய் வாகனம் வழிவிட்டது. ஆம்புலன்ஸும் முந்தி சென்றது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி முதல்வரின் தொடர் செயல்பாடுகளால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications