"அயோத்தி மண்டபம்".. தேவையில்லாததை பாஜக பேச கூடாது.. கனவிலும் நடக்காது! வானதிக்கு முதல்வர் பதிலடி!
சென்னை: அயோத்தி மண்டபம் போன்ற தேவையற்ற விஷயங்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வளப்படுத்த நினைத்தால் அது கனவிலும் நடக்காது என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ளது அயோத்தியா மண்டபம். இந்த மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அங்கே குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இருக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த மண்டபத்தை சிலர் உரிமை கொண்டாடி வந்தது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் இந்த மண்டபம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

அயோத்தியா மண்டபம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த மண்டபம் யாருக்கும் சொந்தமானது கிடையாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதனால் இந்து அறநிலையத்துறை இதை கையகப்படுத்த வேண்டும். அவர்கள் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் இருந்தது.

பாஜக போராட்டம்
இந்த நிலையில்தான் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான ஒரு குழு நேற்று மண்டபத்தை கைப்பற்ற சென்றது. விவரம் அறிந்து மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சிலர் இங்கே குவிந்தனர். வலதுசாரி இந்து அமைப்பினர் இங்கே குவிந்து போராட்டம் செய்தனர். அதை தொடர்ந்து பாஜகவினரும் இங்கே குவிந்து போராட்டம் செய்தனர்.

வானதி
இதையடுத்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் இங்கு போராட்டம் செய்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவர்களின் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அயோத்யா மண்படம் அறநிலையத்துறை கையகப்படுத்துவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று அவையில் கொண்டு வந்தார்.

ஸ்டாலின் கண்டிப்பு
இதை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை எண்ணி செயல்படுங்கள், மத்திய அரசிடம் தமிழகத்துக்கான தேவையை வலியுறுத்துங்கள். ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடிய விஷயத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் . மக்கள் பிரச்சனைகளில் பாஜக கவனம் செலுத்துவதுதான் நல்லது.

முதல்வர் பதில்
சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள். அதை பற்றி பேசுங்கள். அதை விடுத்து தேவையற்ற இதுபோன்ற விஷயங்களை முன்னிறுத்த கூடாது. இப்படி ஏதாவது செய்து தமிழ்நாட்டில் உங்கள் கட்சியை வளப்படுத்த நினைத்தால் அது கனவிலும் நடக்காது என்பதை நினைவுப்படுத்துகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications