சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு
சென்னை: சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் ரூ. 1000-த்தை வாங்கிவிட்டனர் நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையாத நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பச்சை நிற கார்டு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் அறிவிப்புக்கு கட்டுப்பாடு விதித்தனர். அதாவது பச்சை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ. 1000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழக அரசு முறையீடு
ஏற்கெனவே பாதி பேர் வாங்கி விட்ட நிலையில் எங்களுக்கு மட்டும் தடையா என ஆங்காங்கே மக்கள் கொந்தளிக்க தொடங்கினர். உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி தமிழக அரசு முறையீடு செய்தது.
10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறுகையில் சர்க்கரை பெறும் NPHH-S கார்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தடையால் 10 லட்சம குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரிக்க முடியாது
எனவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் அரசின் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து விட்டனர்.