ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம நியூஸ்.. கைரேகை பதிய வரும்படி கட்டாயப்படுத்தக்கூடாது! தமிழக அரசு ஆர்டர்
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கட்டாயம் எனக் கூறி பொதுமக்களை உடனே ரேஷன் கடைகளுக்கு வரச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, நாடு முழுவதும் ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் வாயிலாக அரசு சார்பில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், கைரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரேகையைச் சரிபாா்க்க வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை பதிந்தால் தான் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவுறுத்தினர். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். வெளியூர்களில் வசித்து வருவோர், தினக்கூலி வேலைகளுக்குச் செல்வோர், தாங்கள் நேரடியாக ரேஷன் கடை இயங்கும் நேரத்திற்குச் சென்று காத்திருந்து கைரேகை பதிவு செய்ய இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், கைரேகை பதிவிற்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது எனவும், குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.
ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலைக் கூறக்கூடாது என்று ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications