ஜில் ஜில்னு வர்ற காற்று.. ஒடிக்கிட்டே இருக்குற பஸ்.. சென்னைவாசிகளுக்காக 50 குளுகுளு பேருந்துகள்
சென்னை: வெயிலின் தாக்கம் மோசமாக இருப்பதால், புழுக்கத்தில் தவித்து வரும் சென்னை மக்களை குளுகுளுவென அழைத்து செல்வதற்காக 50 ஏ.சி.சொகுசு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 25ஜி பேருந்தில் மெரினாவில் ஏறி உட்கார்ந்து போரூரில் இறங்க ஆசைப்பட்டால், வியர்வையாலும் கூட்ட நெரிசலாலும் வீடு போய் சேர்வதற்குள் சின்னாபின்னமாகிவிடுவீர்கள். இதேபோல் தான் 29சி (பெரம்பூர் டூ திருவான்மியூர்), 21ஜி (தாம்பரம் to பிராட்வே) ரூட்டிலும், ஆவடி டூ திருவான்மியூர் ரூட்டிலும்(70) மக்கள் வெயில் கொடுமையாலும் கூட்ட நெரிசல்களால் சிக்கி சின்ன பின்னமாகி வருகிறார்கள்.
மேற்கண்ட 3 ரூட்டுகள் வெறும் சாம்பிள்தான்.. சென்னையில் அனைத்து பகுதியிலுமே மக்கள் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் சென்றால் இப்போது அடிக்கும் வெயிலுக்கு அப்பப்பா முடியலையே.. என்ன வெயிலு.. உட்காரவும் முடியல.. நிற்கவும் முடியல.. இதுல கூட்டம் வேற தருமாற இருக்கே.. என புலம்பி தள்ளிவிடுவார்கள்.
இதனால் மக்களை வெயில் கொடுமையில் இருந்து காக்க குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்தை இயக்க போகிறார்களாம். இதன்படி ஐடி பணியில் உள்ளவர்கள், அலுவலக பணியாளர்களை குறிவைத்து 50 ஏசி பேருந்துகளை முக்கிய ரூட்களில் இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன்காரணமாக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதுபற்றி தமிழக அரசுக்கு தெரிவித்தோம். அதனை பரிசீலித்து 50 குளிர்சாதன பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்க முடிவு செய்துள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்துவருகிறது. விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.