ரமலான் மாதம்! நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி! அரசு அறிவிப்பு!
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில், பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி வழங்க வேண்டி 6,000 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், இதன் மூலம் 13 கோடியே 53 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

ரமலான் நோன்பு
நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2022 ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

நோன்புக் கஞ்சி
2022 ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

6,000 மெட்ரிக் டன்
இதன்படி,6,000 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 13 கோடியே 53 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

30 நாட்கள்
ரமலான் மாதத்தின் 30 நாட்களும் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, நாள் முழுவதும் உமிழ்நீர் உட்பட தண்ணீர் கூட பருகாமல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மாலை 6 மணிக்கு மேல் அந்தந்த பகுதிக்கேற்ப நோன்பு திறக்கும் நேரத்தில் உடல் சூட்டை தணிக்கும் பொருட்டும், எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய வகையிலும் நோன்புக் கஞ்சியை கொண்டு இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பார்கள்.












Click it and Unblock the Notifications