புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம்.. 2 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கையில் சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது. சென்னை காவல்துறையை பிரிக்க வேண்டும் என்பது திமுகவின் பல வருட திட்டம். 2008லேயே சென்னை காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஆனால் 2011ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீண்டும் சென்னை காவல்துறையை ஒரே ஆணையரகமாக மீண்டும் மாற்றி உத்தரவிட்டார்.

மாற்றம்
நிர்வாக வசதிக்காகவும், சட்ட ஒழுங்கு கண்காணிப்பிற்காகவும், சென்னை காவல்துறையை பிரிக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில்தான் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை காவல் ஆணையகம் இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே முதல்வர் ஸ்டாலின் சென்னை காவல்துறையை 3ஆக பிரித்து கடந்த கூட்டத்தொடரில் உத்தரவிட்டார்.

மூன்று ஆணையரகம்
அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மொத்தம் மூன்று காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் இந்த காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

யார்?
தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள ரவி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய காவல் ஆணையரகமாக சென்னை உள்ளது. இதனால் நிர்வாக ரீதியாக பணிகளை மேற்கொள்வது கடினமாக இருந்தது.

சிறப்பு அதிகாரிகள்
இந்த நிலையில் தற்போது ஆணையகரம் பிரிக்கப்பட்டு, சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு கீழ் முன்பு ஏற்கெனவே 12 காவல் மாவட்டங்கள் இருந்த நிலையில் கூடுதலாக தாம்பரம், பூவிருந்தவல்லி, உருவாக்கப்பட்டு 14 ஆக உருவாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பும் உள்ளன.












Click it and Unblock the Notifications