கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை சம்பவம்.. சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறிய முக்கிய தகவல்!
சென்னை: போலி என்.சி.சி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் அக்டோபர் 15 ஆம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் பல மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சிவபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சிவராமன் மரணம் குறித்து சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிக்கை அளித்த பின்னர் விசாரணை நடத்தப்படும் எனவும் சிவராமன் தந்தை மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறி பிரேத பரிசோதனை அறிக்கை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், நான்கு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அக்டோபர் 15 ஆம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்து நீதிமன்றத்திற்கு எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டது.
சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே முழுமையான விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அடுத்த விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications