"நான் தான் உங்கள் வேட்பாளர்.. புடிங்க இது தான் என் ரெஸ்யூம்.." அதிமுக வேட்பாளரின் கலக்கல் பிரசாரம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை (பிப். 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

பல முனை போட்டி
தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 5 முனை போட்டி, நிலவிய நிலையில் இந்த முறை அது 7 முனை போட்டியாக மாறியுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து பணித்து வந்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை தனித் தனியாகவே தேர்தலைக் கொள்கிறது.

சென்னை
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 200 வார்டுகளில் உள்ள நிலையில், பல வார்டுகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக மட்டுமின்றி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் கூட இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்
பொதுமக்களைக் கவரும் வகையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். தோசை சுடுவது, துணி இஸ்திரி செய்வது போன்ற செயல்களைச் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் சென்னையில் வார்டு எண் 110இல் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி ரெஸ்யூமை வெளியிட்டு, வித்தியமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார்.

ரெஸ்யூம்
பொதுவாக ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும் வேட்பாளர்கள் வாக்குறுதிகள் அளித்து தான் வாக்கு சேகரிப்பார்கள். ஆனால், இந்த அபிஷேக் ரங்கசாமி வழக்கமான பிரசார முறைகளை உடைக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தனது சுய விவரங்கள் (ரெஸ்யூம்) அடங்கிய துண்டறிக்கையை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதற்கு வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது

யார் அவர்
நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அபிஷேக் ரங்கசாமி, சென்னையில் 110-வது வார்டு அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த 2011இல் பிஇ படித்து முடித்த இவர், 2017இஸ் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துள்ளார். அதேபோல அதிமுகவில் கடந்த 2008 இணைந்த இவர், எம்ஜிஆர் இளைஞரணியிலும் 2017 முதல் செயல்பட்டு வருகிறார். இந்த அத்தனை தகவல்களையும் அவர் தனது ரெஸ்யூமில் தெரிவித்துள்ளார். மேலும், தனித்திறமைகள், வாங்கிய விருதுகள் உள்ளிட்டவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications