மொத்தமா மாறுது.. மின் கட்டண கணக்கெடுப்பு ஆபிசர்ஸ் ஏக குஷி.. தமிழக மின்சார வாரியம் அசத்தலான முடிவு
சென்னை: தமிழத்தில் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடு வீடாக சென்று, 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்நிலையில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, செல்போன் செயலி வாயிலாக மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் நடத்தி வருகிறது. இந்த பணிகளை மின்வாரியம் துரிதப்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு கணக்கீடு என்பது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த முறை மின்பயன்பாடு எவ்வளவு என்பதையும், இப்போது வரை எவ்வளவு யூனிட் ஓடியிருக்கிறது என்பதை நேரில் வந்து கணக்கெடுக்கும் அதிகாரி, அதன் அடிப்படையில் கட்டணம் விதிப்பார்கள். இப்படி கணக்கெடுப்பு நடத்தும் தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்களுக்கு, 'எச்.எச்.சி' எனும் கையடக்க கணினி தரப்பட்டுள்ளது . அதில் தான் அதிகாரிகள் கணக்கெடுத்து கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்கள்.

இந்த சூழலில், மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கவும், நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரத்தை உடனடியாக தெரிவிக்கும் வகையிலும், மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு பணியை செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது. இதன்படி தமிழ்நாடு மின் வாரியம் பிரத்யேக ஆப் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள மின்வாரியத்தின் சென்னை, காஞ்சீபுரம், கோவை, ஈரோடு, மதுரை உள்பட 12 மண்டலங்களை சேர்ந்த சில மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் மூலம் இந்த ஆப்பை பயன்படுத்தி செல்போன் மூலம் மின் அளவீடு செய்யும் சோதனை அடிப்படையிலான பணிகளை மின் வாரியம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், செல்போன் ஆப் மூலம் மின் அளவீடு செய்யும் சோதனை அடிப்படையிலான பணிகளை தமிழகம் முழுவதும் மின்வாரியம் துரிதப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் இந்த ஆப்பை டவுன்லோடு பதிவேற்றம் செய்து, வீடுகளில் மின் அளவீடு பணியை செய்து வருகிறார்கள். இந்த ஆப்பில் எப்படி என்றால், பிரத்யேகமாக 'புளூடூத்' கருவி மூலம் மீட்டர் கருவி மற்றும் செல்போன் இடையே இணைப்பை ஏற்படுத்தப்படுகிறது. அதில் உள்ள அளவுகளை வைத்து ஒவ்வொரு வீடுகளின் மின் பயன்பாடுகளும் கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த புதிய முறை காரணமாக, மின் பயன்பாடு யூனிட் அளவீடுகளில் எந்தவித முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறாது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள். செல்போன் மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணி சோதனை ஓட்டம் முறையில் நடந்து வரும் நிலையில், இது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் சூழலில், மின் பயன்பாட்டில் எந்தவித மாற்றங்களையும் யாராலும் மேற்கொள்ள முடியாது. அரசுக்கும் சரியான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனிடையே டிஜிட்டல் மீட்டருக்கு முழுமையாக மாறும் போது, வரும் காலத்தில் இருந்த இடத்தில் இருந்தே செல்போன் ஆப் மூலமாக மின் கட்டணத்தை அறியவும் கட்டவும் முடியும் என்கிற நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications