குடிசைமாற்று வாரியத்தில் ரூ.700 கோடிக்கு டெண்டர்... இப்போது என்ன அவசரம் வந்தது...? -துரைமுருகன்
சென்னை: துணை முதலமைச்சரின் கீழ் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் 700 கோடி ரூபாய்க்கு புதிய கட்டடங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டிருப்பது எதற்காக, என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வினவியுள்ளார்.
மேலும், ஊரடங்கு காலத்தில் உடனடியாக மனைகளை -கட்டடங்களை விற்கவும் வாங்கவும் ஆலாய்ப் பறப்பது யார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சுயமரியாதை அடமானம்
ஊரே சிரிப்பாகச் சிரிக்கும் நேரத்தில், ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடந்துகொள்வதற்கு, அ.தி.மு.க. ஆட்சியாளர்களைப் போல, பதவிக்காகச் சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்தவர்களால்தான் முடியும். கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்கான "ரேபிட் டெஸ்ட்" கருவிகளை உற்பத்தி செய்த சீனாவில், அதன் விலை ரூ.225 என்றும், சரக்குக் கட்டணம் ரூ.20 என்றும், மொத்தம் ரூ.245 என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது, மத்திய அரசா, தி.மு.க.வா?

பதில் இல்லை
மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவதும், முதலமைச்சரைக் கேள்வி கேட்டால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மறுப்புத் தெரிவிப்பதுமாக, அங்கே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது! கழகத் தலைவர் கேட்பவை, எளிமையான கேள்விகள் "கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து அ.தி.மு.க. அரசிடம் வெளிப்படைத்தன்மை இருந்ததா? உரிய ஆலோசனைகளைக் கேட்டு நடந்தீர்களா?" என்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலே இல்லை.

பாதுகாப்பு உடைகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு இதுநாள்வரை பாதுகாப்பு உடைகள் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றதா? மருத்துவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாத நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்துவைத்து, அதில் பணியாற்றுவோருக்கு முழுமையான கவச உடைகள் வழங்கியிருப்பதற்கான அவசர அவசியத் தேவை என்ன?

எதற்காக டெண்டர்?
முதலமைச்சரின் கீழ் உள்ள பொதுப்பணித்துறையில், புதிய டெண்டர்களுக்கு நிதிச்சுமையைக் காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரின் கீழ் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் 700 கோடி ரூபாய்க்கு புதிய கட்டடங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டிருப்பது எதற்காக? யாருக்காக?

மலிவான அரசியல்
விவசாயிகள் விளைவித்த பயிர்களைக் கொள்முதல் செய்ய வக்கின்றி, அவை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகும் சூழலில், யார் வீட்டுக்கோ வலியச் சென்று பால்பாக்கெட் வழங்கிய காமெடிக் கூத்துகள்தான் நிர்வாக லட்சணமா? ."மக்களின் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள்" என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை.












Click it and Unblock the Notifications