பொறுப்பை தட்டிக் கழித்தால்... கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்... மத்திய அரசுக்கு காங். எச்சரிக்கை..!
சென்னை: கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்பை தட்டிக்கழித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் 5 முக்கியக் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்.

அதன் விவரம் பின்வருமாறு;
1. மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் ?
2. மருந்து உற்பத்தி அதிகரிக்கும்போது, விலையை குறைக்க வேண்டும். ஆனால், விலையை அதிகரிக்க வேண்டிய காரணம் என்ன?
3. ஒரு நிறுவனம் குறைவான விலைக்கு மருந்தைத் தரும்போது, அதே மருந்தை மற்றொரு நிறுவனம் அதிக விலைக்கு எப்படி விற்க முடியும் ?
4. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் தடுப்பூசி மருந்துக்கான செலவை மக்கள் மீதும், மாநில அரசுகள் மீதும் சுமத்துவது சரியா ?
5. இதுவரை ஒரு டோஸ் மருந்தை ரூ. 200 என மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்மூலம், ஒரு டோஸுக்கு ரூ.50 வீதம் சீரம் நிறுவனம் ஏற்கனவே லாபம் அடைந்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்கள் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் போது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி, உள்ளிட்ட மருந்துகளை வழங்க வேண்டிய முதன்மை பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து வருகிறது.
தடுப்பூசி மருந்துக்கான செலவை மக்கள் மீதோ, மாநில அரசுகள் மீதோ சுமத்துவது சரியா? இந்திய மக்களை கொரோனாவின் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறதா ? இல்லையா ? இந்த பொறுப்பை மோடி அரசு தட்டிக் கழிக்கலாமா ? இந்த பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மத்திய அரசின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது.
நாட்டில் தடுப்பூசி தேவை பல மடங்கு உயர்ந்து, உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவது தான் உலகெங்கும் உள்ள பொருளாதார சூத்திரம். உயிர்காக்கும் தடுப்பூசி மருந்தின் விலையை ஏற்றிக் கொள்ள மத்திய அரசே அனுமதித்தது, உலகில் வேறெங்கும் நிகழாத மனிதநேயமற்ற செயலாகும். இது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசிடம் என்ன பதில் இருக்கிறது? மக்களின் உயிரை முதலீடாக்கி வியாபாரம் செய்யும் ஓர் அரசை நாம் பெற்றிருப்பது கொடுமையிலும் கொடுமை.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications