சென்னையின் இதய பகுதி.. டிராபிக் மிக மோசம்! ஆனாலும் மேம்பாலம் அமைக்க முடியாதாம்! என்ன காரணம்?
சென்னை: சென்னையில் டிராபிக் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு டிராபிக் நெரிசலைக் குறைக்கச் சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி முக்கிய பகுதியில் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் 2027 வரை அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளைத் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் டிராபிக் நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று சென்னை. இங்கு என்ன தான் பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ எனப் பல பொது போக்குவரத்து இருந்தாலும் டிராபிக் நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அப்படி சென்னையில் உள்ள மிக முக்கிய பகுதி என்றால் அது வள்ளுவர் கோட்டம்.. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் எப்போதும் டிராபிக் நெரிசல் இருக்கும். அதிலும் குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
வள்ளுவர் கோட்டம்: இதைக் கருத்தில் கொண்டு அங்கு நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்த நிலையில், இப்போது அந்த பணிகள் தாதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால்.. வரும் 2027 வரை கோடம்பாக்கம் மேம்பாலப் பணிகளைத் தொடங்க வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மேம்பால வடிவமைப்பும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கோடம்பாக்கம் சாலைக்கு மேல் சுமார் 570 மீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலையாக இந்த மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 2022ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்சினையால் முதலில் இந்த திட்டம் தாமதமானது. இன்னுமே கூட மேம்பாலம் கட்ட தேவையான 10,000 சதுர மீட்டர் நிலத்தில் 2000 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை.
மெட்ரோ பணிகள்: இது ஒரு பக்கம் இருக்க மெட்ரோ பணிகளும் கோடம்பாக்கம் மேம்பாலப் பணிகளைத் தாமதப்படுத்தியுள்ளது. இந்த சாலையில் இப்போது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 10,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சிக்கல்: தற்போது, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் ரோடு ஆகிய இடங்களில் மெட்ரோ நிலைய பணிகளுக்காகப் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடம்பாக்கம் ஹை ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் சாலை இரண்டும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற முக்கிய டிராபிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இப்போது அங்கு மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "ஏற்கனவே மெட்ரோ பணிகளால் இங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப் பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. எல்லாம் முடிந்து 2027இல் தான் பணிகளைத் தொடங்க முடியும்" என்றார்.
தாமதம்: முதலில் இந்த மேம்பாலம் 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இப்போது திட்டம் தாமதமாகியுள்ளதால் செலவு அதிகரிக்கும். மேலும், தற்போதைய திட்டப்படி இந்த மேம்பாலம் கட்டப்பட்டால்.. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து குறைந்தாலும், அதே அளவு போக்குவரத்து உத்தமர் காந்தி சாலை சந்திப்பிலும் பார்க் ஹோட்டல் சந்திப்பிலும் தேங்கி நிற்கும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போது திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாற்று வழிகள் குறித்தும் அதிகாரிகள் சிந்தித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications