பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வேகமாக சென்றால் புகார் அளிக்கலாம்! விரைவில் புது ரூல்ஸ்!
சென்னை: பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து விபத்திற்குள்ளாகி வரும் நிலையில், இந்த வாகனங்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர்
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இதனை பின்பற்றினாலும், சில கல்வி நிறுவனங்களின் வாகன ஓட்டுநர்கள் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை. இப்படியான வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மாணவன் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 20 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் ஆ.டி.ஒ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. பள்ளி வேன் தவிர, ஆட்டோக்களிலும் மாணவர்கள் வழக்கமாக பள்ளிகளுக்கு சென்று திரும்புகின்றனர். ஒரே ஆட்டோவில் ஆட்டு மந்தை போல குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சில ஆட்டோக்கள் ரோட்டில் பறக்கின்றன. இதுவும் விபத்து உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் உயிரிழந்தார். அதாவது, திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சென்றுள்ளனர். அப்போது திடீரென அந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்திருக்கிறது. இந்த விபத்தில், 5ம் வகுப்பு பயின்று வந்த பிரதீஸ் என்ற மாணவன் விபத்து நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
10க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் சென்றதால்தான் இந்த விபத்து நேர்ந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக சென்றால் மக்கள் புகார் அளிக்கலாம் என்றும் போக்குவரத்து ஆணையர் கூறியுள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை சரியாக பின்பற்றுவதாலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்துவதாலும், சாலைகளை சரியாக பராமரிப்பதாலும் தான் இதுபோன்ற விபத்தை தடுக்க முடியும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications