கிளாம்பாக்கத்தில் இன்று ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம் இதுதான்.. போக்குவரத்துத்துறை பரபர விளக்கம்!
சென்னை: கிளாம்பாக்கத்தில் இந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் கொந்தளித்த நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாகவே பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாத இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் வசதி இல்லாமல், பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கே சென்றடைய முடியவில்லை என புகார்கள் எழுந்தன. மேலும், வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் செல்ல பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டி அவசர கதியில் திமுக அரசு பொங்கலுக்கு முன்பே திறந்து வைத்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டது முதலே எதிர்க்கட்சிகள் திமுக அரசை இந்த விஷயத்தில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்தனர். தங்கள் ஊருக்குச் செல்ல போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கினர்.
இன்று அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் பரவிய நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம்.@official_kcbt… pic.twitter.com/iJvpeZH6qa
— CMDA Chennai (@CMDA_Official) February 10, 2024
மேலும், ஊருக்கு போக போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளையும் செயல்படுத்தும் வரை கோயம்பேட்டுக்கே பேருந்து நிலையத்தை மாற்றுமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இன்று அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் பரவிய நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications