எங்களுக்குள் அண்ணன் - தம்பி சண்டைதான்! ஒரே வேனில் நின்று பிரசாரம் செய்த எடப்பாடி - டிடிவி தினகரன்
சென்னை: தஞ்சையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஒரே வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தனர். அப்போது இன்றைக்கு நாங்கள் ஒரே வேனில் ஒன்றாக நின்று பிரசாரம் செய்வதை பார்த்து, சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர். எங்களுக்குள் இருப்பது அண்ணன் - தம்பி சண்டை தான் என டிடிவி தினகரன் கூறினார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் அமமுக எதிர் எதிராக போட்டியிட்ட நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

ஒன்றாக பிரச்சாரம் செய்த டிடிவி - எடப்பாடி
அதன்படி இன்று தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து ஒன்றாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். தஞ்சை எட்டுப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இருவரும் இணைந்து தஞ்சை ரயில் நிலையம் அருகே பிரசாரம் செய்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தஞ்சை என்றால் பொன் விளையும் பூமி. இந்த பூமியை ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க புரிந்துண்ர்வு ஒப்பந்தம் போட்டார். உங்கள் நிலத்தை அபகரித்த ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டுமா? நான் ஒரு விவசாயி, இன்றும் விவசாயம் செய்கிறேன். நம் பூமியை ஸ்டாலின் அபகரித்து பல்வேறு தொழில்களுக்குக் கொடுக்க முயன்றார்" என்று பேசினார்.
அண்ணன் - தம்பி சண்டை
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், "இன்றைக்கு நாங்கள் ஒரே வேனில் ஒன்றாக நின்று பிரசாரம் செய்வதை பார்த்து, சிலர் பயத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். நாங்கள் அண்ணன் - தம்பி சண்டை போட்டது உண்மை தான்.. எதோ பிரச்சினை செய்தோம், சண்டையிட்டோம்.. தற்போது எல்லோரும் ஒன்றாக வந்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எங்களை வரவேற்கின்றார்கள்.
சென்னை முதல் குமரி வரை நம்ம் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள். நாங்கள் திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் இருந்து விரட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து வந்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி, அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாக்க என்.டி.ஏ கூட்டணியாக நாங்கள் இணைந்துள்ளோம்.
ஜெயலலிதா தான் காரணம்
டெல்டா ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்தது. திமுகவின் கோட்டை என்கிறார்கள். இடையில் நாங்கள் கோட்டை விட்டுட்டோம். இப்போது உறுதியாக இதை ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். காரணம் ஜெயலலிதா காவிரி பிரச்சினையில் எப்படி எல்லாம் போராடினார்கள் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். நமது டெல்டா பகுதியை அண்ணன் எடப்பாடி பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக உருவாக்கி உள்ளார்.
எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்ததோ அப்போதெல்லாம் தஞ்சை பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கிடைத்து இருக்கிறது. பிரதமர் மோடி முதன்முதலாக அறிவித்த ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தஞ்சையும் இருந்ததற்கு ஜெயலலிதா தான் காரணம். இதன் மூலம் ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டுகால ஆட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications