தேவர் சிலையை புல்டோசர் கொண்டு அகற்றுவதா?... டி.டி.வி தினகரன் கண்டனம்!
சென்னை: தேவர் சிலை அனுமதியின்றி நிறுவப்பட்டாலும் அதனை புல்டோசர் கொண்டு அகற்றுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறினார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்களாக பாவித்த தேவர் திருமகனார் அவர்கள் எல்லா தரப்பு மக்களாலும் மதிக்கப்படும் பெருமைக்கு உரியவர். அவருக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் அவருக்காக சிலைகள் அமைக்கும்போது, அரசிடம் உரிய முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைப்பதுதான் தேவர் பெருமகனாருக்கு நாம் செய்யும் நிஜமான மரியாதை ஆகும்.

ஒருசிலர் ஆர்வ மிகுதியின் காரணமாகவோ, விதிமுறைகள் பற்றி அறியாமலோ உரிய அனுமதியின்றி தேவர் பெருமகனாரின் சிலைகளை நிறுவிவிட்டால், காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட நடைமுறைகளை எடுத்துச்சொல்லி, கண்ணியமான முறையில் அந்த சிலைகளை தற்காலிகமாக அகற்றி, உரிய அனுமதிகளுக்குப் பிறகு நிரந்தரமாக அவை நிறுவப்பட வழிவகை செய்ய வேண்டும்.
அ ப்படிச் செய்யாமல், இரவோடு இரவாக ஊருக்குள் புகுந்து, சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தைகூட நடத்தாமல், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலை என்றாலும் கூட புல்டோசர் கொண்டு அச்சிலைகளை அகற்றுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் பின்னணியில் காவல்துறையினர் செய்யும் கண்ணியமற்ற இந்தச் செயல் அந்தத் தலைவருக்கு அவமரியாதை செய்வது மட்டுமல்ல... அரசின் அதிகார, ஆணவப்போக்கை காட்டுவதாகவும் இருக்கிறது. இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் சம்பந்தப்பட்ட மக்களும், காவல்துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications