உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறி வருகிறது.. விளாசும் ஸ்டாலின்
சென்னை: உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஏற்கனவே பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜுக்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களை காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன், போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடர்புள்ள போலீசார் மீது இன்னும் எப்ஐஆர் கூட பதிவு செய்யாத நிலை இருப்பதாக நாடு முழுக்க இருந்து கடும் கண்டனங்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
போலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தற்கொலை செய்த கட்டிட தொழிலாளி.. குடும்பத்தாரிடம் கனிமொழி நேரில் ஆறுதல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதல், பல்வேறு பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வரை சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்துள்ளனர். தவறு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. 29 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை மாலை மதுபோதையில் பைக்கில் சென்ற போது தவறி விழுந்துள்ளார். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது வீடு திரும்பிய பிறகு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட கணேசமூர்த்தி அவரது மகனின் பள்ளி நோட்டுப் புத்தகத்தில், தனது மரணத்துக்கு உளவுத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார். இதனால் எட்டையபுரம் பகுதி பரபரப்பாகியுள்ளது.