41 பேருங்க! பேசும் மனநிலையில் இல்லை! கரூர் மக்களை விரைவில் சந்திப்போம்! ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை கூடிய விரைவில் சந்திப்போம் என தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் தாயின் இறப்பை விட கரூரில் 41 சொந்தங்களை இழந்தது எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் குறித்து நான் பேசும் மனநிலையில் இல்லை.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விரைந்து சந்திப்போம் என ஆதவ் கூறினார். விஜய் எப்போது கரூர் செல்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இப்போது எதையும் சொல்ல முடியாது என தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆதவ் அர்ஜுனா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்... இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.
மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்.
இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் பின்னணியில் சதி இருக்கலாம் என்று தவெக சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!" என்று குறிப்பிட்டுள்ளது கவனம் பெறுகிறது.
அது போல் இன்று ஒரு சர்ச்சைக்குரிய பதிவை போட்டுவிட்டு அவர் அதை நீக்கியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதவில், "சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று தெரிவித்துவிட்டு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை நீக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications